ஜனாதிபதி பதவி: நாராயணனுக்கு வாஜ்பாய் ஆதரவில்லை
டெல்லி:
கே.ஆர். நாராயணன் மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவு இல்லை என்றுஅவரிடம் பிரதமர் வாஜ்பாய் நேரடியாகவே கூறிவிட்டார்.
எல்லையில் பதற்றம் சூழ்ந்துள்ள நிலையில் நேற்று மாலை வாஜ்பாய் திடீரென்று ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றுநாராயணனைச் சந்தித்துப் பேசினார். சுமார் 45 நிமிடங்கள் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதியான ராஜேந்திர பிரசாத் தவிர யாருமே இதுவரை இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவிவகிக்கவில்லை என்றும் எழுதப்படாத அந்த மரபையே தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியும்கடைப்பிடிக்கிறது என்றும் நாராயணனிடம் வாஜ்பாய் கூறினார்.
இதனால் மீண்டும் ஜனாதிபதியாக எங்களால் உங்களுக்கு ஆதரவ தர இயலாது என்று வாஜ்பாய் நேரடியாகவேநாராயணனிடம் கூறிவிட்டார்.
நாராயணனே மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்று இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி கட்சி,லோக் ஜன சக்தி உள்ளிட்ட சில கட்சிகள் கூறியுள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று தங்களுடைய ஆதரவு உண்டுஎன்று நாராயணனை நேரில் சந்தித்துக் கூறினார்.
இந்நிலையில் நாராயணன் மீண்டும் ஜனாதிபதியாவதை ஏற்கனவே விரும்பாத வாஜ்பாயும் நேற்று நேரடியாகச்சென்று ஆதரவில்லை என்று அவரிடம் கூறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாராயணனின் ஜனாதிபதி பதவிக் காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அடுத்த ஜனாதிபதிபதவிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.