பா.ம.கவுக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்
சென்னை:
மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் விரிவாக்கப்படவுள்ளது. இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் இடம் தரப்படும்என்று தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடனேயே அமைச்சரவையை விரிவாக்க பிரதமர் வாஜ்பாய்திட்டமிட்டிருந்தார். ஆனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அத் திட்டத்தை ஒத்தி வைத்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயகக்கூட்டணியைவிட்டு விலகியது பா.ம.க. அமைச்சரவையில் இருந்த 2 பா.ம.க. எம்.பிக்களும் பதவி விலகினர்.
ஆனால், தேர்தல் முடிந்த கையோடு அதிமுக கூட்டணியைவிட்டு பா.ம.க. விலகியது. பின்னர் பிரதரை டெல்லியில்போய் நேரில் சந்தித்து மீண்டும் கூட்டணியில் சேர்ந்தார் ராமதாஸ். இந்த விஷயத்தில் திமுகவுடன் பிரதமர் கலந்துஆலோசிக்கவில்லை.
இதனால், திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே உரசல் கூட ஏற்பட்டது. அப்போதிலிருந்து மத்தியஅமைச்சரவையில் மீண்டும் இடம் கேட்டு பா.ம.க. பிரதமரை நச்சரித்து வந்தது.
இப்போது அக் கட்சிக்கு மீண்டும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தர பிரதமர் முடிவு செய்துள்ளார். அதேபோல மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசும் கோபித்துக் கொண்டு வெளியே போய் மீண்டும் தேசியஜனநாயகக் கூட்டணிக்கு வந்தது.
இந்த இரு கட்சிகளையும் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் முடிவு செய்துள்ளார்.