அத்வானி துணைப் பிரதமராக வாய்ப்பு
டெல்லி:
உள்துறை அமைச்சர் அத்வானி துணைப் பிரதமராக்கப்படுவார் என் தெரிகிறது.
அமைச்சரவையை மாற்றி அமைக்க பிரதமர் வாஜ்பாய் திட்டமிட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மழை காலக் கூட்டத்தொடர் ஜூலை 15ம் தேதி துவங்கவுள்ளது.
அதற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றப்படும் என்று தெரிகிறது. ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த பல சட்டமன்றத்தேர்தல்களிலும் தொடர் தோல்வி ஏற்பட்டதால் பல அமைச்சர்கள் மீண்டும் கட்சிப் பணிக்கு அனுப்ப வாஜ்பாய்திட்டமிட்டுள்ளார்.
ஆனால், அவர்கள் விலக மறுத்து வருகின்றனர். இதனால் தொடர் ஆலோசனைகளில் வாஜ்பாய் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பிரதமரின் இல்லத்தில் மூத்த அமைச்சர்களின் கூட்டம நடந்தது. இதில் அமைச்சர்கள் அத்வானி, ஜஸ்வந்த்சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரமோத் மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன் கட்சியின் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி வாஜ்பாயைச் சந்தித்துப்பேசிவிட்டுச் சென்றார்.
கட்சித் தலைவர் பதவியில் இருந்து கிருஷ்ணமூர்த்தியை நீக்கிவிட்டு அவரை அமைச்சராக்க முயற்சிகள்நடக்கின்றன. ஆனால், கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதையே கிருஷ்ணமூர்த்தி விரும்புவாதத் தெரிகிறது.
அதே நேரத்தில் அமைச்சரவையில் இடம் பிடிக்க பல மூத்த தலைவர்களும் முயன்று வருகின்றனர். தனதுகட்சிகுள்ளேயே இது போன்ற குழப்பம் உள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் பலவும் மேலும் சில அமைச்சரவைப்பதவிகளைக் கேட்கின்றனர்.
பரூக் அப்துல்லா தனக்கு அல்லது தனது மகனுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி கேட்கிறார். ஜார்ஜ்பெர்னாண்டஸ் தனது சமதா கட்சிக்கு இன்னொரு அமைச்சர் பதவி வேண்டும் என்கிறார்.
இப்போது மத்தியில் 71 பேர் கொண்ட ஜம்போ அமைச்சரவை பதவியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்றப்படும் அமைச்சரவையில் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சி, திருநாவுக்கரசு ஆகியோருக்கும் பதவிகள்கிடைக்கலாம் என்று தெரிகிறது.
அத்வானிக்கு மேலும் முக்கியத்துவம் தரப்படவுள்ளது. சங் பரிவார் அமைப்புகள் அவருக்கு கூடுதல் அதிகாரம் தரவேண்டும் என்று நெருக்குதல் தந்து வருகின்றன. இதனால் அவர் துணைப் பிரதமர் ஆகலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் தனது வேலைப்பளுவை குறைக்க முடியும் என வாஜ்பாய் நினைப்பதாகவும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications