பிளஸ் டூ: தொடங்கியது உடனடி மறு தேர்வு
சென்னை:
கடந்த ஆண்டு (2001-02) பிளஸ் டூ தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த மாணவ-மாணவிகளுக்கானஉடனடி மறு தேர்வு இன்று தொடங்கியது.
இதுவரை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் தான் இந்த மறு தேர்வுகள் நடந்துவந்தன. இதனால் தோல்வியடைந்த மாணவர்களுக்கு அந்த ஒரு ஆண்டு முழுவதும் விரயமாகி விடுகிறது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு ஆண்டு முழுவதும் வீணாகிவிடுவதைத் தவிர்ப்பதற்காக, ஓரிரு பாடங்களில் தவறிய பிளஸ் டூ மாணவர்களுக்கு ஜூன் மாதத்துக்குள் உடனடிமறு தேர்வு நடத்தும் திட்டத்தை தமிழக அரசு இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த ஆண்டுக்கான உடனடி மறு தேர்வு இன்று காலை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் சுமார் 42,000 மாணவர்கள் இந்த உடனடி மறு தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.சென்னையில் மட்டும் 40 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.
இந்த மறு தேர்வு மூலம் ஓரிரு பாடங்களில் தவறிய மாணவர்கள், இதில் தேர்வாகும் பட்சத்தில் அடுத்த ஓரிருமாதங்களிலேயே மேற்படிப்பில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
வரும் ஜூலை 6ம் தேதி வரை இந்த உடனடி மறு தேர்வு நடக்கும் என்றும் அம்மாத இறுதிக்குள்ளாகவே தேர்வுமுடிவுகள் வெளியிடப்படும் என்றும் தேர்வுத் துறை இயக்குநர் பழனிவேலு தெரிவித்தார்.