காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 27 பேர் பலி
ஜம்மூ:
காஷ்மீரில் ஜம்மூ நகரில் தீவிரவாதிகள் நடத்திய மிக பயங்கர தாக்குதலில் 27 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்குதுணைப் பிரதமர் அத்வானி இன்று விரைகிறார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தான் காரணம் என இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
இச் சம்பவத்தையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை ஆராய தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இன்று பிரதமர்வாஜ்பாயின் இல்லத்தில் கூடி விவாதித்தது.
ராணுவத்திரை குறி வைத்துத் தாக்கி வந்த பயங்கரவாதிகள் இப்போது அப்பாவி பொது மக்களை தாக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும்பிகாரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள்.
ஜம்மூவில் காசிம்நகர் பகுதியில் ஜூக்கி என்ற இடத்தில் குடிசைப் பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் புகுந்த தீவிரவாதிகள் வீடுகளைத் தட்டிமக்களை எழுப்பினர். அவர்கள் வெளியே வந்தவுடன் அவர்கள் மீது கிரனைட் குண்டுகளை வீசினர். மக்கள் நிலை குலைந்தவுடன் அவர்கள்மீது கண்மூடித்தனமாக தீவிரவாதிகள் சுட்டனர்.
இதில் 24 பேர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டனர். 31 பேர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள்.காயமடைந்தவர்களில் பலரும் பெண்கள்.
குண்டுச் சத்தம் கேட்ட சில நிமிடங்களில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் அங்கு விரைந்து வந்துவிட்டனர். படையினர் வந்ததைப்பார்த்தவுடன் அந்தத் தீவிரவாதிகள் மலைப்பாங்கான காட்டுப் பகுதிக்குள் நுழைந்து இருட்டில் மறைந்து ஓடிவிட்டனர்.
காயமடைந்தவர்களை போலீசார் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்த்தனர். ஆனால், இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றிஇறந்துவிட்டனர்.
காலுசக்கில் ராணுவ குடியிருப்பின் மீது நடந்த தாக்குதலுக்குப் பின நடந்துள்ள மிகப் பெரிய தீவிரவாதிகள் தாக்குதல் இது. இந்தத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இச் சம்பவத்தையடுத்து நிலைமையை ஆராய கேபினட் கமிட்டியின் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டம் முடிந்தவுடன் துணைப்பிரதமர் அத்வானி அங்கு விரைகிறார்.
இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தீவிரவாதிகள் தான் காரணம் என காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார். தீவிரவாதிகள் ஊடுருவலை நிறுத்திவிட்டதாக பாகிஸ்தான் பொய் சொல்கிறது என்று கூறியுள்ள அவர், உடனே அந்தநாட்டை சர்வதேச நாடுகள் நெருக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
மத்திய உள்துறை இணையமைச்சர் ஐ.டி. சாமி கூறுகையில், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் முஷாரப் தான் காரணம். தீவிரவாதமுகாம்களை அவர் மூடாத வரை இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும் என்றார்.