புதுவையில் போலீசார் - 2 ரவுடிகள் பயங்கர துப்பாக்கிச் சண்டை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த 2 கொலையாளிகளைத் துப்பாக்கிச் சண்டை போட்டு போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
திருச்சியைச் சேர்ந்த செல்வம் மற்றும் பாரதி ஆகிய இருவரும் பயங்கரமான ரவுடிகள். பணம் கொடுத்தால் கொலை செய்யும் கூலிப் படையைச் சேர்ந்தவர்கள். பல்வேறு கொலை வழக்குகள் தொடர்பாக திருச்சி போலீசார் இவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த இரண்டு ரவுடிகளும் பாண்டிச்சேரியில் பதுங்கியிருப்பதாகத் திருச்சி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாண்டிச்சேரி விரைந்த தனிப் போலீஸ் படையினர் அந்நகரப் போலீசாரின் உதவியுடன் ரவுடிகளைத் தேடினர். அப்போது அவர்கள் இருவரும் முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. கடந்த ஏழு மாதங்களாக அவர்கள் இந்த வீட்டில் இருந்தனர்.
இதையடுத்து திருச்சி-பாண்டிச்சேரி போலீசார் இன்று காலை அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர். ஆனால் அந்த இரு ரவுடிகளும் தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் காட்டி போலீசாரை மிரட்டி தப்பிக்க முயற்சித்தனர்.
பின்னர் போலீசாரை நோக்கி கைத்துப்பாக்கிகளால் அந்த ரவுடிகள் சுட ஆரம்பித்தனர். இதை நன்கு எதிர்பார்த்த போலீசாரும் பதிலடியாக துப்பாக்கிகளால் ரவுடிகளை நோக்கிச் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே சுமார் ஐந்து மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்நிலையில் திடீரென்று துப்பாக்கிச் சத்தம் நின்று விட்டது. பின்னர் போலீசார் மைக்ரோ போன் மற்றும் ஸ்பீக்கர் உதவியுடன் அந்த ரவுடிகளை சரணடைந்து விடுமாறு கூறினர்.
உடனே சரணடையா விட்டால் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து சுட்டுக் கொன்று விடுவோம் என்றும் போலீசார் மிரட்டினர்.
இதையடுத்து வீட்டுக்குள் மறைந்திருந்த இரண்டு ரவுடிகளும் வெளியே வந்த இரண்டு பேரும் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு போலீசாரிடம் சரணடைந்தனர்.
அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட சில ஆயுதங்கள், செல்போன் மற்றும் ஒரு மாருதி கார் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.
சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையால் முத்தியால்பேட்டை பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.