வறண்டு கொண்டிருக்கும் சென்னை ஏரிகள்: மழை காலத்திலும் குடிநீர் பஞ்ச அபாயம்
சென்னை:
சென்னை ஏரிகள் வரண்டு வருவதால் நகரின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வது கடினமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை நகருக்கு ஐந்து பெரிய ஏரிகள் மூலம் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. செம்பரம்பாக்கம், புழல், செங்குன்றம், சோழவரம், பூண்டி ஆகிய இந்த ஏரிகள் தான் சென்னை குடிநீர் விநியோக ஆதாரமாக உள்ளன.
ஆனால் இவற்றில் தற்போதைய நீர் இருப்பு மிகவும் கவலை அளிக்கும்படி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில், இந்த ஐந்து ஏரிகளிலும் 34 கோடியே 70 லட்சத்து கன அடி நீர் இருப்பு இருந்தது. ஆனால் இப்போதோ, 28 கோடியே 70 லட்சத்து கன அடி நீர் இருப்பு மட்டுமே உள்ளது.
எனவே நகருக்கு சிக்கல் இல்லாமல் குடிநீர் வழங்குவதில் தடங்கல் ஏற்படலாம் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
பருவ மழை வழக்கமாக ஜூலை முதல் வாரத்திலேயே தொடங்கி விடும். ஆனால் ஆகஸ்ட் மாதம் பிறந்தும் இதுவரை நல்ல மழை பெய்யவில்லை. அவ்வப்போது லேசான தூறல் போடுவதோடு வானம் அமைதியாகி விடுகிறது.
சரியான மழை இல்லாததால் ஏரிகள் தொடர்ந்து வறண்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் மழை காலத்திலும் கூட சென்னை நகரில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.