"எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி"க்கு மூடுவிழா
சென்னை:
சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி என்று அழைக்கப்படும் திரைப்பட நகரம் இழுத்து மூடப்பட்டது. இனி இங்கு படப்பிடிப்பு எதுவும் நடைபெறாது. விரைவில் இது எம்.ஜி.ஆர். அறிவியல் நகராக மாறுகிறது.
சென்னை தரமணியில் உள்ள இந்த பிலிம் சிட்டி கடந்த 1994ம் ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது.
அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பெயரில் தான் "ஜெ ஜெ பிலிம் சிட்டி"யாக இது உருவானது.
இதைத் தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தப் பெயர் மாற்றப்பட்டு "எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி" என்று அழைக்கப்பட்டது.
சுமார் 66 ஏக்கர் பரப்பளவுள்ள இந்தத் திரைப்பட நகரில் ஏ.சி. செய்யப்பட்ட படப்பிடிப்பு அரங்குகள், பரந்த புல்வெளி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்தத் திரைப்பட நகரால் எதிர்பார்த்த வருமானம் தமிழக அரசுக்குக் கிடைக்கவில்லை.
இதனால் இந்த நகரை விரிவாக்கம் செய்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 40 ஏக்கர் நிலம் கூட பின்னர் "டைடல் சாப்ட்வேர் பார்க்"காக மாற்றப்பட்டது. மேலும் திரைப்பட நகருக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலம் தமிழக தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் எஞ்சியுள்ள 41 ஏக்கர் நிலத்தை அறிவியல் நகராக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
இதையடுத்து எம்.ஜி.ஆர். பிலிம் சிட்டி நேற்று முதல் மூடப்பட்டது. நேற்று எந்தவிதமான படப்பிடிப்பும் நடக்கவில்லை. இனியும் நடைபெறாது.
விரைவில் இது "எம்.ஜி.ஆர். அறிவியல் நகராக" மாறுகிறது.












Click it and Unblock the Notifications