நாட்டுப் பற்றை ஜெ. நிரூபித்துள்ளார்: சுவாமி
பாஸ்டன் (அமெரிக்கா):
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனைக் கைது செய்ததன் மூலம் தான் உண்மையிலேயே நாட்டுப்பற்று மிக்கவர் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
பொடா சட்டத்தின் கீழ் நெடுமாறன் கைது செய்யப்பட்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் இது தொடர்பாக அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலிருந்து சுவாமி அனுப்பியுள்ள பேக்ஸ் செய்தியில்,
தமிழக அரசு சட்டப்படி தான் நடந்து கொண்டுள்ளது. மேலும் தன்னுடைய அரசியல் சாசனக் கடமையையும் தமிழக அரசு செவ்வனே நிறைவேற்றியுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும்.
மேலும் நெடுமாறனைக் கைது செய்திருப்பதன் மூலம் தான் உண்மையிலேயே நாட்டுப்பற்று மிகுந்தவர் என்பதை ஜெயலலிதா நிரூபித்துள்ளார் என்று அந்த பேக்ஸ் அறிக்கையில் சுவாமி கூறியுள்ளார்.