கண்ணப்பன் குறித்து "செஞ்சி"யிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்டார் அத்வானி
டெல்லி:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கண்ணப்பன் பேசியது தொடர்பாக மற்றொரு மதிமுக அமைச்சரான செஞ்சி ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணைப் பிரதமர் அத்வானி விளக்கம் கேட்டார்.
புலிகளுக்கு ஆதரவாகக் கண்ணப்பன் தொடர்ந்து பேசி வருவதால் அவரை மத்திய அமைச்சரவையிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் நகல் அத்வானிக்கும் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில் செஞ்சி ராமச்சந்திரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி, "அங்கு என்ன தான் நடக்கிறது? கண்ணப்பனைப் பற்றி ஜெயலலிதா எங்களுக்குக் கடிதம் எழுத என்ன காரணம்? கண்ணப்பன் புலிகளை ஆதரித்துப் பேசினாரா?" என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த செஞ்சி ராமச்சந்திரன், "பொதுக் கூட்டத்திலும் நிருபர்கள் கூட்டத்திலும் கட்சியின் நிலைப்பாட்டைத் தான் கூறியிருப்பார். ஆனால் மத்திய அரசுக்குத் தர்ம சங்கடம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் கண்ணப்பன் பேசியிருக்க மாட்டார். அவரைச் சந்தித்து பேசி நான் உங்களுக்கு முழு விவரங்களையும் கூறுகிறேன்" என்றார்.
"இது போன்ற சூழ்நிலையில் ஏன் நிருபர்களையெல்லாம் சந்திக்கிறீர்கள்? தவிர்த்து விடலாமே" என்று அப்போது செஞ்சி ராமச்சந்திரனிடம் அத்வானி அறிவுரை கூறினார்.
இதற்கிடையே ஜெயலலிதா அனுப்பிய கடிதம் தொடர்பாக கண்ணப்பனிடமும் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.












Click it and Unblock the Notifications