ஊழலை கேள்வி கேட்டால்... நீங்க தப்பு செய்றீங்க
டெல்லி:
பா.ஜ.கவினரின் பெட்ரோல் பங்க் ஊழல் இன்றும் நாடாளுமன்றத்தில் வெடித்தது.
கார்கில் வீரர்களுக்கு ஒதுக்கப்பட இருந்த ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சி, மண்ணெண்ணெய் ஏஜென்சிகளை பா.ஜ.க. தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் அவர்களது குடும்பத்தினர் பங்கு போட்டுள்ளனர்.
இந்த விவரத்தை பத்திரிக்கைகள் வெளியிட்டதால் இந்த பெட்ரோல் பங்க் உரிமங்களை நேற்று இரவு பிரதமர் வாஜ்பாய் ரத்து செய்தார். ஆனால், இந்த விவகாரத்தில் நேரடித் தொடர்புள்ள பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பா.ஜ.க. ஏற்கவில்லை.
கேள்வி கேட்கலாமா??
ஆனால், அமைச்சர் ராம் நாயக் கூறுகையில், இந்த உரிமங்களை வழங்கியதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, இதை ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட கமிட்டி தான் வழங்கியது. இந்த உரிமம் வழங்கியதை யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் நீதித் துறையையே அவமானப்படுத்துவது மாதிரி என்று கூறி பத்திரிக்கையாலர்களை மிரட்டி, தனது குற்றத்தை மறைக்க முயன்று வருகிறார் ராம் நாயக்.
இதையே பல பா.ஜ.க. தலைவர்களும் கூறி வருகின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பதில்:
ஆனால், நேற்று இந்தச் செய்தியை வெளியிட்டு பா.ஜ.கவை பிரச்சனையில் சிக்க வைத்த இந்தியன் எக்ஸ்பிரசின் ஆசிரியர் சேகர் குப்தா கூறுகையில், செய்த தவறையும் செய்துவிட்டு இப்படி நீதித்துறையின் பின்னால் போய் ஆளும் கட்சி மறைந்து கொள்வது மிகப் பெரிய அவமானம் என்றார்.
இந்த உரிமங்களை வழங்கியது தொடர்பான ஆவணங்களை உடனே சி.பி.ஐ. கைப்பற்ற வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரி வருகின்றன. அதற்கு முன் ராம் நாயக் விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்த விவகாரத்தால் நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
இன்றும் இந்தப் பிரச்சனை லோக் சபாவிலும் ராஜ்யசபாவிலும் வெடித்தது. அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும், ஊழல் செய்த பா.ஜ.க. அரசு விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் குரல் எழுப்பினர்.
இதை எதிர்த்து பா.ஜ.கவினர் கோஷம் எழுப்பவே அவைகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் இன்றும் ஒத்தி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications