ஆசிரியையிடம் லஞ்சம் கேட்ட 3 கல்வித்துறை அதிகாரிகள் கைது
திருச்சி:
தாற்காலிக பதவியில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியையை பணி நிரந்தரம் செய்ய லஞ்சம் கேட்ட 3 கல்வி அதிகாரிகளும், பியூன் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களது வீட்டிலும் போலீசார் ரெய்ட் நடத்தினர்.
திருச்சியை அடுத்துள்ள திருவெறம்பூரில் பாய்லர் ஆலையின் பள்ளியில் தாற்காலிகமாக ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஞானச்செல்வி. நீண்டகாலமாக தாற்காலிகப் பணியில் இருந்ததால் தன்னை நிரந்தர ஊழியராகக் கோரி திருச்சி கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக தங்களை நேரில் சந்திக்கும்படி திருச்சி மாவட்டக் கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு ஞானச்செல்வி சென்றார். அப்போது அவரிடம் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமானால் ரூ. 7,000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறப்பட்டது.
லஞ்சம் கொடுத்து தனக்கு பதவி நிரந்தரம் வாங்குவதை விரும்பாத அந்த ஆசிரியை உடனடியாக இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் தந்தார்.
இதையடுத்து போலீசார் கூறியபடி ரூ. 7,000த்துடன் நேற்று திருச்சி கல்வித்துறை அலுவலகம் சென்றார். அங்கு கல்வி அதிகாரி சுப.வள்ளியப்பனைச் சந்தித்து பணத்தைக் கொடுத்தார். உடனே மறைந்திருந்த போலீசார் உள்ளே நுழைந்து வள்ளியப்பனை கையும் களவுமாகப் பிடித்தனர்.
இந்த லஞ்சத்தை பங்கு போட திட்டமிட்டிருந்த வள்ளியப்பனின் உதவியாளர் மற்றும் வரதராஜன், கோமதி என்ற 2 கல்வித்துறை கண்காணிப்பாளர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவுடன் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு வெளியே வந்தார் வள்ளியப்பன். கைதான பெண் அதிகாரியான கோமதி தனது முகத்தை புடவையால் மூடியபடி அழுதுகொண்டே வந்து போலீஸ் ஜீப்பில் ஏறினார்.
இதையடுத்து இந்த நால்வரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் இன்று காலை சோதனை நடத்தினர். சோதனையில் என்ன சிக்கியது என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications