பெட்ரோல் பங்க் ஊழலில் காங்கிரசை இழுக்கும் பா.ஜ.க.
டெல்லி:
பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு விவகாரத்தில் பல காங்கிரஸ் தலைவர்களும் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க. அவர்களுடைய பெயர்களைப் பட்டியலிட ஆரம்பித்துள்ளது.
பெட்ரோல் பங்க் ஒதுக்கப்பட்டதில் ஏராளமான ஊழல் செய்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் ராம் நாயக் பதவி விலக வேண்டும் என்று எதிர்க் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
எதிர்க் கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றின் நடவடிக்கைகள் தடைபட்டன.
கார்கில் வீரர்களின் குடும்பத்தினருக்காகத் தான் பெட்ரோல் பங்க்குகள் மற்றும் கேஸ் ஏஜென்சிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் அதில் ஏராளமானவற்றை பா.ஜ.கவினர் தங்களுக்கும் தங்களுடைய உறவினர்களுக்குமே ஒதுக்கிக் கொண்டனர்.
கடந்த வியாழக்கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்தச் செய்தியை வெளியிட்டது. அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட காங்கிரஸ் கட்சி ராம் நாயக் பதவி விலகியே தீர வேண்டும் என்று கூறி நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றச் சாட்டுக்களை காங்கிரஸ் மீதே பா.ஜ.க. திருப்பி விட ஆரம்பித்துள்ளது.
பெட்ரோல் பங்க்குகளை ஒதுக்குவதற்காக பல காங்கிரஸ் தலைவர்களும் பரிந்துரைக் கடிதங்களை அனுப்பியுள்ளதாக அவர்களுடைய பெயர்களையும் பா.ஜ.க. இன்று பட்டியலிட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சுசில் குமார் ஷிண்டே, மோதிலால் வோரா, ஜோதிராத்யா சிந்தியா, ஆஸ்கார் பெர்னாண்டஸ், கிரிஜா வியாஸ், பங்காரப்பா என்று பா.ஜ.கவின் குற்றச்சாட்டுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் மல்ஹோத்ரா இன்று மாலை இந்தப் பட்டியலை வெளியிட்டார்.