ஊழலை வெளியிட்ட தெகல்கா மீது மத்திய அரசு பாய்ச்சல்
டெல்லி:
இந்திய ராணுவத்தில் நடந்த மாபெரும் ஊழல் குறித்து விவரங்களை வெளியிட்ட தெகல்கா.காம் இணையத் தளத்தின் இன்வஸ்டிகேடிவ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். ஆனால், அவரை நீதிமன்றம் ஜாமீனில் உடனடியாக விடுவித்தது.
இந்த ஊழல் குறித்து செய்தி வெளியிட்டதில் இருந்து அந்த நிறுவனத்தை மத்திய அரசு வதைத்து வருகிறது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, போலீசார், சி.பி.ஐ. என தொடர்ந்து தன்னிடம் உள்ள எல்லா துறைகளின் அதிகாரத்தைத் கொண்டு தெகல்கா நிறுவனத்தை நெருக்கி வருகிறது.
இந் நிலையில் சி.பி.ஐ. அதிகாரி ஒருவரை தாக்கியதாக தெகல்கா ஆசிரியரக் அனிருத்த பெகலை போலீசார் கைது செய்தனர்.
நேற்று சி.பி.ஐ. அதிகாரியான கராயத் என்பவர் தெகல்கா அலுவலகத்திற்கு விசாரணைக்காக சென்றபோது அவரை அனிருத்த பெகல் தாக்கியதாக புகார் தரப்பட்டுள்ளது. ஆனால், விசாரணைக்காக தெகல்காவுக்கு சென்றவர் நோட்டீஸ் எதையும் தரவில்லை.
இதனால் அவர் எதற்காக அங்கு சென்றார் என்று தெரியவில்லை. உள்ளே சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த அதிகாரி டெல்லி போலீசாரிடம் தன்னை அனிருத் தாக்கியதாக புகார் கொடுத்தார்.
இதையடுத்து இன்று அனிருத்த பெகலை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் இன்று டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே நேரத்தில் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என அனிருத்த பெகலுக்கு உத்தரவிடப்பட்டது.
போலீசார் கொடுத்துள்ள ஆதாரங்கள் அனிருத்த பெகல் தவறு செய்ததை நிரூபிக்க போதுமானதாக இல்லை என நீதிபதி கூறினார்.
இப்போது இந்தியன் எக்ஸ்பிரசால் பெட்ரோல் பங்க் ஊழலில் சிக்கியுள்ள பா.ஜ.க. அரசு முதலில் தெகல்காவால் ராணுவ ஊழலில் சிக்கியது.
தொடர்ந்து பத்திரிக்கைகளால் மத்திய அரசின் ஊழல்கள் வெளியிடப்பட்டு வருவதால் தங்களை முதலில் மாட்டிவிட்ட தெகல்கா மீது புதிய தாக்குதலை பா.ஜ.க. ஆரம்பித்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து அனிருத்த பெகல் நிருபர்களிடம் கூறுகையில், எனது கைது மூலம் ஒரு விஷயத்தை மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. யாராவது எங்கள் ஊழல்களை வெளியிட்டால் அவர்களை சும்மா விடமாட்டோம் என்பதை மத்திய அரசு தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டது.
இந்த மிரட்டல்கள் மூலம் எல்லாம் தெகல்காவை ஒழித்துவிட முடியாது என்பதை மத்திய அரசுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அனிருத்தின் கைது பத்திரிக்கை சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் என இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுதந்திர இந்தியாவில் இது போல ஒரு செய்தி நிறுவனம் மத்திய அரசால் கொடுமைக்குள்ளாக்கப்பட்டதில்லை என காங்கிரஸ் கூறியுள்ளது.
-->












Click it and Unblock the Notifications