வைகோவுக்கு மீண்டும் 28 நாட்கள் சிறை
சென்னை:
வைகோவின் சிறை வாசம் மேலும் 28 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல வைகோவுடன் கைதான 8 மதிமுகவினரில் 6 பேரின் சிறைவாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 பேர் விசாரணைக்காக க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜூன் 11ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வைகோ மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 28 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றுடன் அந்த 28 நாள் காவல் முடிவடைகிறது. இதையடுத்து இன்று வைகோ சென்னை பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதற்காக காலை 9.15 மணிக்கு வேலூர் சிறையில் இருந்து வைகோவை அழைத்துக் கொண்டு போலீஸ் படை கிளம்பியது. 2 வேன்கள் நிறைய ஏ.கே. 47 ஏந்திய ஏந்திய போலீசார் காவலுக்கு வர தனி வேனில் வைகோ சென்னை கொண்டு வரப்பட்டார்.
12 மணியளவில் சென்னை பூந்தமல்லி பொடா தனி நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டார் வைகோ. அங்கு அவரைக் காண ஏராளமான பொது மக்களும் மதிமுகவினரும் கூடியிருந்தனர். கூடியிருந்த மக்களை நோக்கி கையை அசைத்துவிட்டு போலீசாருடன் நீதிமன்றத்துக்குள் சென்றார் வைகோ.
அங்கு நீதிபதி எல். ராஜேந்திரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
வைகோ வாதம்:
அப்போது தன்னை கைது செய்ததை எதிர்த்து வைகோவே நீதிமன்றத்தில் வாதாடினார். வழக்கறிஞரின் உதவியை அவர் நாடவில்லை.
நீதிபதியிடம் வைகோ கூறுகையில், மை லார்ட்.. பொடா சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்க மதுரை திருமங்கலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் கிடையாது.
ஒருவரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமானால் அதற்காக அமைக்கப்பட்ட தனி நீதிமன்றம் தான் வாரண்ட் பிறப்பிக்க வேண்டும். ஆனால், வழக்கமான நீதிமன்றமாகிய திருமங்கலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுக்கு கைது பொடா சட்டத்தின் கீழ் வாரண்ட் பிறப்பிக்கவோ, கைது செய்து சிறையிலடைக்கவோ அதிகாரம் இல்லை.
இதனால், என்னைக் கைது செய்ததே தவறு என்று ஆகிவிட்டது. தவறான முறையில் கைது செய்யப்பட்ட நான் சட்டவிரோதமாக 28 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டேன். தவறான முறையில் கைது செய்யப்பட்ட என்சிறைக் காவலை நீட்டிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதனால் எனது கைது செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்றார் வைகோ.
அரசு வழக்கறிஞர் பதில் வாதம்:
இதையடுத்துப் பேசிய அரசு வழக்கறிஞர் ஜெயக்குமார், இந்த வழக்கில் போலீஸ் விசாரணை நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் விசாரணையை துரிதப்படுத்த வைகோவை தொடர்ந்து மேலும் 30 நாட்களுக்கு சிறையில் வைத்திருப்பது நல்லது. அவரைக் கைது செய்ய திருமங்கலம் மாவட்ட நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்து கொள்ளலாம் என்றார்.
நீதிபதி தீர்ப்பு:
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேந்திரன், வைகோவை செப்டம்பர் 4ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.
மற்ற மதிமுகவினர்:
இதற்கிடையே வைகோவுடன் கைது செய்யப்பட்ட மற்ற 8 மதிமுக பிரமுகர்களும் திருச்சி, சேலம் மற்றும் மதுரை சிறைகளிலிருந்து நேற்று இரவே சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அவர்களும் இன்று காலை பொடா தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் சார்பாக வாதாடிய தேவதாஸ், மதிமுகவினரை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று வாதிட்டார்.
ஆனால் அவரை எதிர்த்து வாதாடிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜெயக்குமார் மதிமுக பிரமுகர்களின் நீதிமன்றக் காவலை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி ராஜேந்திரன் மதிமுக பிரமுகர்களையும் செப்டம்பர் 4ம் தேதி வரை சிறையில் வைக்க உத்தரவிட்டார்.
2 மதிமுகவினருக்கு போலீஸ் காவல்:
மதிமுகவினரின் சிறைக் காவலை நீடித்தவுடன் நீதிபதியிடம் க்யூ பிராஞ்ச் போலீசார் ஒரு கோரிக்கையை வைத்தனர். மதிமுகவினரான கணேசன் மற்றும் நாகராஜன் ஆகிய இருவரையும் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவர்களைப் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இம்மனுவை ஏற்ற நீதிபதி ராஜேந்திரன் அந்த இரண்டு பேரையும் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கணேசனையும் நாகராஜனையும் க்யூ பிராஞ்ச் போலீசார் விசாரணைக்காக தனியாக அழைத்துச் சென்றனர்.
மீண்டும் சிறையில்...
இந்தத் தீர்ப்புகளையடுத்து வைகோ மீண்டும் வேலூர் கொண்டு செல்லப்பட்டார். மற்ற மதிமுகவினரும் திருச்சி, சேலம் மற்றும் மதுரை சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.