டெல்லியில் போலீஸ் ஜீப்பில் சென்ற வைகோ
சென்னை:
துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (திங்கள்கிழமை)காலை விமானத்தில் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார்.
டெல்லியில் வாக்களிக்க வந்திருந்த எம்.பிக்களும் மத்திய அமைச்சர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டு நலம் விசாரித்தனர்.அதே போல வைகோவைப் படம் எடுக்க பத்திரிக்கை போட்டோகிராபர்கள் இடையே பெரும் தள்ளுமுள்ளு நடந்தது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வைகோ, டெல்லி சென்று துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்போட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் வேலூரில் சிறையில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு மத்தியசிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று காலை அவர் பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார். அவருடன்தமிழக போலீஸ் அதிகாரிகளும் டெல்லி சென்றுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் வைகோவைப் பார்க்க ஏராளமான மதிமுகவினர் கூடிவிட்டனர். அவர்கள்வைகோவைப் பார்த்தவுடன் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
வழியில் யாருக்கும் அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் சென்னை விமானநிலையத்தில் வைகோ பேட்டியளிக்கவில்லை. அதே போல கட்சியினருடனும் அவர் பேசவில்லை.
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் டெல்லி அழைத்துச் செல்லப்பட்டார் வைகோ.
டெல்லி சென்று இறங்கியதும் அந்த மாநில அரசின் போலீஸ் ஜீப் மூலம் அவரை போலீசார் நாடாளுமன்றக் கட்டடத்துக்குக்கொண்டு சென்றனர்.
நாடாளுமன்ற வாயிலில் அவரை மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் வரவேற்று அழைத்துச் சென்றார். வைகோவிடம்பத்திரிக்கை நிருபர்களும் டிவி நிருபர்களும் தொடர்ந்து கேள்விகள் கேட்டனர். ஆனால், உடன் இருந்த மகாஜன் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை சுட்டிக் காட்டி வைகோவால் பேட்டி தர முடியாது என விளக்கினார்.
இதன் பின்னர் வைகோ வாக்களித்தார்.
வைகோ நாடாளுமன்றத்துக்கு வருவதற்கு முன் பிரமோத் மஜானிடம் நிருபர்கள் பேசினர். அப்போது அவரிடம் வைகோஎப்போது வருவார்? எப்போது வாக்களிப்பார் என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த மகாஜன், ஜெயிலுக்கு போவது மிக எளிது..வெளியே வருவது மிகவும் கடினம் என பதிலளித்தார்.
வைகோ இன்று மாலையே மீண்டும் சென்னை அழைத்து வரப்படுவார். பின்னர் உடனடியாக அவர் வேலூர்கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கு சிறையில் வைக்கப்படுவார்.