தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறும்: கருணாநிதி எச்சரிக்கை
சென்னை:
போலீசாரும் ரவுடிகளும் சேர்ந்து பேயாட்டம் போடுவதை நிறுத்தாவிட்டால் தமிழகம் விரைவில் சுடுகாடாக மாறுவதைத் தடுக்கமுடியாமல் போய்விடும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரையில் திமுகவினர் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதி கலாம் தலையிட வேண்டும்எனவும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக எம்.பிக்கள் 15 பேரும் கலாமிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.
முன்னதாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், பசி, பட்டினியால் வாடும் நெசவாளர்களுக்கு கஞ்சி ஊற்றும் திமுகவினதிட்டத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்துக் கொள்ளாமல் அதையும் அரசியல் ஆக்கி அட்டூழியம் செய்து வருகிறது அதிமுக.
அம்மையார் குப்பத்தில் கஞ்சி ஊற்ற நான் செல்ல இருந்தபோது போர்க் களம் அமைக்க அதிமுகவினர் திட்டமிட்டனர்.மதுரையில் போர்க் களத்தையே அமைத்துவிட்டனர். திமுகவினரை தாக்கியதோடு மட்டுமல்லாமல், தாக்கப்பட்டவர்களையேகைதும் செய்து சிறையில் அடைத்து வெறித்தனம் செய்து வருகிறது இந்த அடாவடி அரசு.
திமுகவினரை வழக்குத் தொடர்ந்து மிரட்டி வரும் ஆளும் கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டியது நமது கடமை. வரும் 19ம் தேதிமாவட்டத் தலைநகரங்களில் நடக்கும் கண்டனப் பேரணிகளில் திமுகவினர் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.
எம்.பிக்கள் கடிதம்:
இந் நிலையில் தமிழகத்தில் திமுகவினர் மீது நடந்து வரும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி அப்துல்கலாமிடம் திமுக எம்.பிக்கள் கடிதம் தந்துள்ளனர். மேலும் அன்பழகன் எழுதிய கடிதத்தையும் அவர்கள் ஜனாதிபதி மாளிகையில்ஒப்படைத்தனர்.
எம்.பிக்கள் எழுதியுள்ள கடிதத்தில், எங்கள் கட்சியினரையே அடித்துப் போட்டுவிட்டு அவர்களையே போலீசார் கைதும்செய்துள்ளனர். தமிழகத்தில் போலீசார் மிகத் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். இதை நீங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.