முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை ஏன்?: "போயஸ் தோட்டத்தை கேளுங்கள்"- கருணாநிதி
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன் என்ற நிருபர்களின் கேள்விக்கு போயஸ்தோட்டத்தில் போய்க் கேளுங்கள் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி பதிலளித்தார்.
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், ஜெனிபர் சந்திரன், திமுகவுக்குத் தாவியமுன்னாள் அதிமுக அமைச்சர் ரகுபதி மற்றும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை எம்.எல்.ஏ. ரெங்கநாதன் ஆகியோர்வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இது தொடர்பாக இன்று நிருபர்களிடம் கருணாநிதி பேசுகையில்,
குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
ஆனால் அரசியல் பழி வாங்கும் நோக்கில் தான் இந்தச் சோதனைகள் நடைபெற்றுள்ளன என்றார் கருணாநிதி.
முன்னதாக நேற்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
அதிமுக அரசின் இந்தத் திடீர் சோதனைகள் மூலம் தான் திமுக இன்னும் அதிகமான விறுவிறுப்புடன் செயல்படும்.
இதை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என்றார் கருணாநிதி.
அப்போது இந்தச் சோதனைக்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டதற்கு, அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் போயஸ்தோட்டத்திற்குச் சென்று கேட்டுக் கொள்ளுங்கள் என்று கருணாநிதி பதில் கூறினார்.