தாய்லாந்து பேச்சுவார்த்தை: சந்திரிகா புதிய நிபந்தனை
கொழும்பு:
தாய்லாந்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக் குழுவில் தன் சார்பாகவும் ஒரு பிரதிநிதி இருக்க வேண்டும் என்றுஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா விரும்புகிறார்.
புலிகள் மீதான தடை நீக்கப்படுவதையோ வடக்கு-கிழக்கு இலங்கையில் அவர்கள் இடைக்கால அரசுஅமைப்பதையோ ஆரம்பத்திலிருந்தே சந்திரிகா எதிர்த்து வருகிறார்.
ஆனால் அவரை ஒருவழியாகச் சரிக்கட்டி விட்டு பேச்சுவார்த்தை துவங்குவதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் ரணில் மேற்கொண்டார். வரும் 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தாய்லாந்தில் முதற்கட்டப்பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்நிலையில் இந்தப் பேச்சுவார்த்தையின் போது தன்னுடைய சார்பில் யாராவது ஒருவரைப் பிரதிநிதியாகநியமிக்க வேண்டும் என்று சந்திரிகா விரும்புகிறார். இதுகுறித்து ரணில் அரசுக்கு நேரடியாகவே தெரிவிக்கப்பட்டுவிட்டது என்ற சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் பெய்ரிஸ் இன்று தெரிவித்தார்.
சந்திரிகாவின் இந்தப் புதிய கோரிக்கை காரணமாக பேச்சுவார்த்தையில் மேலும் சில குழப்பங்கள் ஏற்படலாம்என்று கருதப்படுகிறது. இதற்குப் புலிகள் சம்மதம் தருவார்களா என்பது குறித்தும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
கடைசி நேரத்தில் வந்து சந்திரிகா ஏன் இவ்வாறு கேட்டு குழப்பங்களை ஏற்படுத்துகிறார் என்ற கேள்விகளும் எழஆரம்பித்துள்ளன.
முஸ்லீம்கள் பாதுகாப்பு குறித்து பேச்சு: புலிகள் உறுதி
இதற்கிடையே புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இலங்கை முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்தும்நிச்சயம் பேசப்படும் என்று புலிகள் உறுதியளித்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது தமிழர்கள் மட்டுமல்லாமல் முஸ்லீம்களும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் எனவே இந்தப்பேச்சுவார்த்தையில் முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்தும் பேசப்பட வேண்டும் என்று புலிகளிடம் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கோரியிருந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று லண்டன் சென்ற அக்கட்சியின் தலைவர் ரப் ஹக்கீம் அங்கு புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கத்தைச் சந்தித்துப்பேசினார்.
அப்போது முஸ்லீம்களின் பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தையின் போது நிச்சயம் பேசப்படும் என்று ஹக்கீமுக்கு பாலசிங்கம் உறுதி அளித்தார். இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் புலிகளுக்கும் முஸ்லீம் காங்கிரசுக்கும் இடையே நேற்றிரவு கையெழுத்தாகியுள்ளது.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் தற்போது நிலவும் நிலைமைகள் குறித்தும் அவர்கள் இருவரும் விரிவாகஆலோசனை நடத்தினர்.
தாய்லாந்தில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வன்னி பகுதியில் வைத்து இதுகுறித்து விரிவாகப் பேசுவது என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை ஹக்கீம் சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும்முஸ்லீம்களின் பிரச்சனைகள் குறித்து விரிவாகப் பேச்சு நடத்தப்பட்டது.