நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடகம் மதித்து நடக்க வேண்டும்: ஜனா.கிருஷ்ணமூர்த்தி
சென்னை:
காவிரி விவகாரததில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் மதித்து நடக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சர் ஜனா. கிருஷ்ணமூர்த்திகூறினார்.
சென்னையில் விமான நிலையத்தில் நிருபர்களிடம் இன்று காலை பேசிய அவர்,
காவிரி விவகாரத்தில் இப்போது மத்திய அரசு தலையிட முடியாது. உச்ச நீதிமன்றம் அனைத்து அமைப்புகளைவிட உயர்ந்தது. அதன்தீர்ப்பை யாராக இருந்தாலும் மதிக்க வேண்டும். கர்நாடகம் மதித்து நடக்கும் என்று நம்புகிறேன்.
பிரச்சனையைத் தீர்க்க பிரதமர் வாஜ்பாய் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசுசெயல்பட்டு வருவதாகக் கூறுவது தவறு என்றார்.
கருணாநிதி பேட்டி:
காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் அகம்பாவப் போக்கு காரணமாகவே தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காமல்போய்விட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவர் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,
நாகப்பாவை வீரப்பன் கடத்திச் சென்ற விஷயத்தில் கர்நாடத்துடன் தேவையில்லாமல் முரண்டு பிடித்தார் ஜெயலலிதா. அண்டைமாநிலத்துடனான உறவை சீர்கெடுத்தார். அதன் விளைவைத்தான் இப்போது காவிரிப் பாசன விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து கர்நாடகம் உடனே நீரைத் திறந்துவிட வேண்டும் என்றார்.