தூத்துக்குடி: சுடுகாட்டில் "ஆவிகளிடம் மனு கொடுக்க" முயற்சி
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உண்ணாவிரதம் போன்ற அமைதியான போராட்டங்கள் நடத்த முக்கியஇடங்களில் அனுமதிகொடுக்காத காவல்துறையைக் கண்டித்து சுடுகாட்டில் "ஆவிகளிடம்" மனு கொடுத்து போராட்டம் நடத்த அரசுஊழியர்கள் முயற்சித்தனர்.
தூத்துக்குடியில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை நடத்த கலெக்டர் அலுவலகம், பஸ்நிலையம் போன்ற முக்கியமான இடங்களுக்கு அருகே காவல்துறை அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் காவல்துறையைக் கண்டித்து சுடுகாட்டில் ஆர்ப்பாட்டம்நடத்தி "ஆவிகளிடம்" மனு கொடுக்கப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஏராளமான அரசு ஊழியர்கள் சுடுகாட்டில் திரண்டனர். காவல்துறையினரும் அங்கு வந்தனர்.
"ஆவிகளிடம்" மனு கொடுக்கும் போராட்டத்தைக் கைவிடுமாறும், போராட்ட இடம் தருவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாகவும் காவல்துறையினர் உறுதியளிக்கவே, அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டுசுடுகாட்டில் இருந்து திரும்பினர்.