ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராதிகாவுக்கு பாரதிராஜா நோட்டீஸ்
சென்னை:
என் புகழ், மரியாதை அனைத்தையும் குலைத்துவிடும் வகையில் பேட்டி அளித்துள்ள நடிகை ராதிகா எனக்கு ரூ.5கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீரைத் திறந்துவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 12ம் தேதிநெய்வேலியில் திரையுலகினர் மாபெரும் பேரணிப் போராட்டத்தை நடத்தினார்கள்.
பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ராதிகா, டி. ராஜேந்தர் போன்றோர் கலந்துகொள்ளாமல் கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில் 13ம் தேதி சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ராதிகா, பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்த போது பாரதிராஜாவை வாங்குவாங்கென்று வாங்கிவிட்டார். அவர் கூறுகையில்,
நெய்வேலியில் திரண்ட கூட்டம், பாரதிராஜாவுக்காக வந்த கூட்டமா? இல்லை. நடிகர்களுக்காக வந்த கூட்டம்.
அவர் எங்காவது தனியாக நின்று பார்க்கட்டும், எவ்வளவு கூட்டம் வருகிறதென்று நாமும் பார்ப்போம்.
மேலும் நெய்வேலிக் கூட்டத்தில் இவர் காவிரி பிரச்சனையை விட்டுவிட்டு சொந்தக் கதைகளை எல்லாம்பேசுகிறார்.
யாரிடமோ (தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து தான்) பணம் வாங்கிக் கொண்டு தான் பாரதிராஜாஇப்படியெல்லாம் பேசியுள்ளார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
தமிழனுக்கு எதிரி தமிழனே தான் என்று சொல்வார்களே, அது பாரதிராஜா தான் என்றார் ராதிகா.
இந்நிலையில் ராதிகாவுக்கு தன் வக்கீல் பாஸ்கர் மூலம் பாரதிராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தநோட்டீசில்,
ஜெயலலிதாவிடம் நான் பணம் வாங்கிவிட்டதாகவும், அதை நெய்வேலி பொதுக் கூட்டத்தில் நானே ஒப்புக்கொண்டதாகவும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார் ராதிகா.
கடந்த 25 ஆண்டுகளாக நான் சேர்த்து வைத்திருந்த பெயர், புகழ், மரியாதை ஆகியவற்றைக் குலைக்கும் விதமாகராதிகா பேட்டி அளித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் உள்ள என் பெயரைக் களங்கப்படுத்திய ராதிகா அதற்கு நஷ்ட ஈடாக எனக்கு ரூ.5 கோடிதரவேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த ஒரு வாரமாக அடங்கியிருந்த திரையுலகப் பிரச்சனைகள் மீண்டும் கிளம்பியுள்ளன.
இந்த நோட்டீசுக்கு ராதிகா அளிக்கும் பதிலைப் பொறுத்து பிரச்சனை எந்த அளவுக்குத் தீவிரமாகும் என்பதைப்பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.