சென்னை கோவிலில் உண்டியலை உடைத்து நகை, பணம் கொள்ளை
சென்னை:
சென்னை-திருவல்லிக்கேணியில் உள்ள அன்புபுரி அம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள் மற்றும் ரூ.50,000 பணம் ஆகியவற்றைக் கொள்ளையர்கள் திருடிச் சென்றனர்.
அன்புபுரி அம்மன் கோவில் பூசாரியான ரவிச்சந்திரன் இன்று காலை வழக்கம் போல கோவிலைத் திறந்தபோது அங்கிருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கு ஏராளமான சில்லரை நாணயங்களும் இறைந்து கிடந்தன.
இதையடுத்து அவர் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.
மார்கழி மாதம் என்பதால் அன்புபுரி அம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதாகவும், நாள்தோறும் அவர்கள் அதிக அளவிலான காணிக்கைகளை உண்டியலில் செலுத்துவார்கள் என்றும் ரவிச்சந்திரன் கூறினார்.
உண்டியலை உடைத்த கொள்ளையர்கள் அதிலிருந்த நகை மற்றும் பணத்தை மட்டும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சில்லரை நாணயங்களை அவர்கள் எடுக்கவில்லை.
சுமார் ரூ.50,000 பணத்தையும், தங்க நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. நகைகளின் மதிப்பும் எவ்வளவு என்று தெரியவில்லை.
அன்புபுரி அம்மன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருவல்லிக்கேணி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications