புதிய வீராணம் திட்டம் தொடக்கம்: ஜெ.க்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற 200 விவசாயிகள் கைது
கடலூர்:
புதிய வீராணம் திட்டத்தைத் துவக்கி வைப்பதற்காக இன்று கடலூர் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கறுப்புக்கொடி காட்ட முயன்ற 200 விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர்.
வீராணம் ஏறி வற்றிப் போய் கிடப்பதால் இந்தத் திட்டமே தேவையில்லை என்று எதிர்க் கட்சிகள் இத்திட்டத்தைஎதிர்த்துப் போர்க்கொடி எழுப்பி வருகின்றனர்.
இந்த ஏரி நீரை சென்னைக்குத் திருப்பி விடுவதால் கடலூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாகப்பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அவர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ரூ.720 கோடி செலவில் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் புதிய வீராணம் திட்டத்துக்கு அடிக்கல்நாட்ட ஜெயலலிதா சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் இன்று பிற்பகல் கடலூர் வந்து சேர்ந்தார்.
அமைச்சர்கள், கடலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டவர்கள் ஜெயலலிதாவை வரவேற்றனர். அவர் கலந்துகொள்ளும் அரசு விழாவுக்காக கடலூரில் பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டுள்ளது.
பின்னர் இன்று மாலை புதிய வீராணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஜெயலலிதா. மேலும் ரூ.27 கோடிமதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய ஜெயலலிதா, 18,162 பேருக்கு சுமார் 13 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
வீராணம் ஏரியிலிருந்து குறைந்த அளவு நீரே சென்னைக்குக் கொண்டுசெல்லப்படுவதால் கடலூர் மாவட்டவிவசாயிகளுக்கு இதனால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று விழாவில் பேசும்போது ஜெயலலிதாகூறினார்.
சபாநாயகர் காளிமுத்து இவ்விழாவுக்குத் தலைமை தாங்கினார். ஜெயலலிதா வருகையையொட்டி கடலூரில்ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கடலூர் வரும் ஜெயலலிகாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான அழகிரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடலூரில் திரண்டிருந்தனர்.
இதையடுத்து அழகிரி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகளைப் போலீசார் கைது செய்தனர்.ஜெயலலிதாவுக்குக் கறுப்புக் கொடி காட்டுவதற்கு முன்பே அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
-->