மீண்டும் அமெரிக்க விமானம், ஹெலிகாப்டரை வீழ்த்தியது ஈராக்?
பாக்தாத்:
ஒரு அமெரிக்க விமானத்தையும் ஒரு ஹெலிகாப்டரையும் தனது படைகள் சுட்டு வீழ்த்தியதாக ஈராக் கூறியுள்ளது.மேலும் பல அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
இன்று நிருபர்களிடம் பேசிய தகவல் துறை அமைச்சர் அல் சகாப் இதனைத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
பாக்தாதை நோக்கி வரும் அமெரிக்கப் படைகளை வழியில் எங்கள் படைகள் பல இடங்களில் தாக்கி வருகின்றன.இதில் பல அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தங்களுக்கு கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதால்வெறியடைந்துள்ள அமெரிக்கப் படைகள் வழியில் அப்பாவி மக்களையும் கொன்று வருகின்றன.
பாக்தாதுக்கு வரும் அவர்களுக்கு மலர்கள் காத்துக் கொண்டிருக்கவில்லை. துப்பாக்கிகள் காத்துக் கொண்டுள்ளன.உயிரை இழக்க வரும் அமெரிக்க- பிரிட்டிஷ் வீரர்களை பாக்தாதுக்கு வரவேற்கிறேன் என்றார்.
இன்று விமானம், ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதாக ஈராக் கூறியதை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.
அரபு நாடுகளுக்கு ஈராக் கோரிக்கை:
இதற்கிடையே பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து உலக அளவில் குறிப்பாக அமெரிக்கா,பிரிட்டனில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துமாறு அரபு நாடுகளுக்கு ஈராக் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈராக் துணை அதிபர் தாகா யாசின் ரமதான் கூறுகையில், ஈராக்குக்கு அரபு நாடுகள் துணையாக நிற்க வேண்டும்.அமெரிக்காவுக்குப் பணிந்து எங்கள் தூதர்களை வெளியேற்றி வரும் அரபு நாடுகள் வெட்கப்பட வேண்டும்என்றார்.
-->