திமுகவுடன் கூட்டணி இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு
சென்னை:
தமிழகத்தில் இப்போதைக்கு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்த பேச்சுக்கே இடமில்லை என காங்கிரஸ் கட்சியின் அகிலஇந்திய பொதுச் செயலாளரும் தமிழக, பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான கமல் நாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் தமிழக காங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வந்த ரமேஷ் சென்னிதலா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக கமல் நாத்தைசோனியா நியமித்தார். மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் சோனியாவுக்கு மிக நெருக்கமானவர்.
இந்தப் பொறுப்பை ஏற்ற பின்னர் முதல்முறையாக கமல் நாத் இன்று சென்னை வந்தார். அவருடன் ஜி.கே. வாசனும் உடன் வந்தார்.
விமான நிலையத்தில் அவரை காங்கிரஸ் கட்சியின் பல்வேறு கோஷ்டிகளும் வரவேற்றன. காங்கிரஸ் மாநிலத் தலைவர்சோ.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் மற்றும் தங்கபாலு, பிரபு உள்ளிட்டோர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்துவரவேற்றனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய கமல் நாத், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் கடும்கோஷ்டிப் பூசல் இருப்பதாக பேசுகிறார்கள். இது ஒரு குடும்பப் பிரச்சனை. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆர்வ மிகுதியால்செயல்படுவதால் பிரச்சனை ஏற்படுகிறது. இதெல்லாம் பேசி சரி செய்யப்படும்.
தமிழகத்தில் இப்போதைக்கு திமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை. திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் ஆட்சிகளால்வெறுத்துப் போயுள்ள மக்கள் இனி வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பார்கள் என்ற முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
இந் நிலையில் ஜார்க்கண்ட், பீகார் மாநில காங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வந்த ஜி.கே. வாசனை பதவி இறக்கம் செய்துள்ளார்சோனியா காந்தி. அவருக்கு அந்தமான் நிகோபார் தீவுகளின் காங்கிரஸ் பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது.
அடுத்த தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி உறுதி என்று பேச்சப்பட்டு வரும் நிலையில் கமல்நாத்தின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.கூட்டணி விஷயத்தில் பா.ஜ.கவை கடைசி நிமிடம் வரை சஸ்பென்சிலேயே வைத்திருக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.