ஆடுகள் கொலை.. பழிக்கு பாலாஜி கொலை... பழிக்குப் பழியாக கதிரவன் கொலை
சென்னை:
சென்னை மயிலாப்பூர் பகுதியில் கிரிக்கெட் வீரரை வெட்டிக் கொன்றவர்களில ஒருவர் பழிக்குப் பழியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
கிரிக்கெட் வீரரின் தம்பி மற்றும் நண்பர்கள் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.
மயிலாப்பூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் பலரும் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜிஎன்பவர் அங்கு ஆடுகளத்தை (பிட்ச்) தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது அடுகளத்துக்குள் நுழைந்த ஆடுகளை அவர் உருட்டுக்கட்டைகளால் தாக்கினார்.
இதில் 4 ஆடுகள் மண்டை உடைந்து துடிதுடித்து இறந்தன.
இதையடுத்து பாலாஜியை, ஆட்டுக்குச் சொந்தக்காரர்களான 4 பேர் நடு ரோட்டில் விரட்டி விரட்டி வெட்டிப் படுகொலை செய்தனர். இந்தக்கொலையைச் செய்தவர்களில் ஒருவர் பெண் ஆவார்.
இந்தக் கொலைச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் கொல்லப்பட்ட பாலாஜியின் தம்பி சேகர்மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்தக் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டனர்.
நேற்று இரவு பல்லாக்கு மணியம் பகுதிக்கு சேகர், அவரது நண்பர்கள் பிரான்சிஸ், செந்தில் ஆகியோர் சென்றனர். பாலாஜியைக் கொலைசெய்தவர்களில் ஒருவரான கதிரவன் என்பவரைப் பிடித்து சரமாரியாக குத்திக் கொன்றனர். இவர் இங்கு தலைமறைவாகப் பதுங்கிஇருந்தார்.
இந்தக் கொலைக்கும் பழிக்குப் பழியாக மேலும் கொலைகள் நடக்கலாம் என்ற அச்சம் இப் பகுதியில் பரவியுள்ளது.
கொலையாளியான கதிரவனை போலீசார் தேடி வந்தனர். அவரைப் பிடித்து உள்ளே போட்டியிருந்தால் கொலையைத் தவிர்த்திருக்கமுடியும். ஆனால், போலீசாரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், கதிரவன் பதுங்கி இருந்த இடத்தை பாலாஜியின் தம்பி எளிதாகக் கண்டுபிடித்துக் கொலை செய்துள்ளார். இந்தக் கொலைக்கு நம்போலீசாரின் கையாலாகதத்தனம் தான் முக்கிய காரணமாகத் தெரிகிறது.