காஞ்சியில் தனியார் மருத்துவ கல்லூரி-க்கு அனுமதி: ஆனாலும், டாக்டர்களின் போராட்டம் வாபஸ்
சென்னை:
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தரக் கூடாது என்று மருத்துவக் கல்லூரி மாணவர்களும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்களும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், காஞ்சிபுரம் அருகே புதிதாக தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை இந்த அனுமதியை அளித்ததுள்ளது. இந்தத் தனியார் கல்லூரியைத் தொடங்க ஆட்சேபணை ஏதும் இல்லை என தமிழக அரசு கடிதம் தந்ததையடுத்துத் தான் மத்திய அரசு இக் கல்லூரிக்கு அனுமதி அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் அறக்கட்டளை சார்பில், ஏனாத்தூர் என்ற இடத்தில் இந்த தனியார் மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இங்கு ஆண்டுதோறும் 100 மாணவர்களை சேர்த்துக் கொள்ள இக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேச்சுக்குத் தயார்: மாணவர்கள் அறிவிப்பு
இந் நிலையில் அரசுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலைக்கும் அவர்கள் எழுத்துப் பூர்வமான ஒப்புதலை அளித்துள்ளனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில் இன்று மருத்துவக் கல்வி இயக்குனர் ரவீந்திரநாத்தைச் சந்தித்த மாணவர்கள், நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று கூறி கடிதம் கொடுத்தனர்.
பின்னர் மாணவர்கள் சங்க துணைத் தலைவர் காரல் செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வதானால் எழுத்துப் பூர்வமாக கடிதம் தருமாறு எங்களிடம் கூறப்பட்டது. அதை ஏற்று இப்போது கடிதம் கொடுத்துள்ளோம். அவர்கள் அழைக்கும்போது சென்று பேச்சுவார்த்தை நடத்துவோம். இருப்பினும் அதுவரை போராட்டம் தொடரும் என்றார்.
ரவீந்திரநாத் கூறுகையில், மாணவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்தக் கடிதம் சுகாதாரத் துறை அமைச்சரிடம் ஒப்படைக்கப்படும். அவர்தான் இதுகுறித்து இறுதி முடிவெடுக்க முடியும் என்றார்.
டாக்டர்களுக்கு நோட்டீஸ்:
இதற்கிடையே, நேற்று வேலை நிறுத்தம் செய்த அரசு டாக்டர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான விளக்கம் தராத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அரசு கூறியுள்ளது.
டாக்டர்கள் போராட்டம் ஒத்திவைப்பு:
இந் நிலையில் அரசு டாக்டர்கள் இன்று முதல் தொடங்குவதாக இருந்த ஊசி போடா போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு டாக்டர்கள்சங்கத் தலைவர் பிரகாசம் தெரிவித்தார்.
நேற்று நடந்த ஒரு நிாள் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது,4 பேர் பலியான நிலையில், ஊசிகள் போடாவிட்டால், நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், மக்கள் நலன் கருதி இந்தப் போராட்டத்தை கைவிடுவதாக டாக்டர் பிரகாசம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மற்ற போராட்டங்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications