போலீஸ் காவலில் அழகிரி: 2 நாள் விசாரணை நடக்கும்
மதுரை:
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.
இதையடுத்து அவர் மதுரை செல்லூர் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
நீதிமன்றக் காவலில் இருந்த அழகிரியை போலீஸ் காவலில் ஒப்படைக் கோரி காவல்துறையில் மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாராணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் மற்றும் அழகிரி தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தீர்ப்பை இன்று மாலைக்கு ஒத்தி வைத்தார்.
மாலையில் தீர்ப்பளித்த நீதிபதி வனிதா, இரு நாட்களுக்கு அழகிரியை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். அழகிரியை போலீசார் விசாரிக்கும்போது உடன் அழகிரியின் வழக்கறிஞரும் இருக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக நீதிபதியிடம் பேசிய அழகிரி, போலீஸ் காவலில் என்னை ஒப்படைத்தால் போலீசார் என்னைக் கொன்றுவிடுவார்கள். இதனால் போலீஸ் காவலில் என்னை அனுப்பக் கூடாது என்றார்.
ஆனால், அழகிரியின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி 4ம் தேதி மாலை 3.30 மணி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்கவும் அன்றைய தினமே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
மேலும் 3 பேர் கைது:
இதற்கிடையே, தா.கிருட்டிணன் கொலை வழக்கில் பல்வேறு திமுகவினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ஆவின் நிறுவன முன்னாள் தலைவர் மன்னனின் கார் டிரைவர் பாலகுரு, மணி மற்றும் ஈஸ்வரன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கொலையைச் செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பியவர்களை ஒரு டாடா குவாலிஸ் கார் தொடர்ந்து சென்றதாகவும், ஓரிடத்தில் வைத்து கொலையாளிகள் காரில் ஏறியதாகவும் கூறப்படுகிறது.
இந்தக் கார் மன்னனுக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. அந்தக் காரையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மதுரையில் வெட்டியாகத் திரிந்த மன்னனிடம் இன்று கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ளன.
மதுரை ஆவின் பால் கூட்டுறவுத் தலைவர் பதவியில் இருந்தபோது சுருட்டோ சுருட்டு என்று பணத்தை சுருட்டினார் இந்த மன்னன். இப்போது மன்னனின் கார் டிரைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.