பாண்டிச்சேரி: ராஜ்யசபா எம்.பி. பதவியை பிடிக்க குடுமி பிடி சண்டை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள ஒரே ஒரு ராஜ்யசபா இடத்தைப் பிடிக்க, காங்கிரஸ் தலைவர்களுக்கிடையே கடும் போட்டிநிலவுகிறது.
பாண்டிச்சேரிக்கு ராஜ்யசபாவில் ஒரு இடம் உண்டு. தற்போதைய ராஜ்யசபா எம்.பியான திருநாவுக்கரசுவின்பதவிக்காலம் முடிவடைவதால் அதற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. 18ம் தேதியுடன் வேட்ப மனுத்தாக்கல் முடிவடைகிறது.வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
வெற்றிக்குத் தேவையான 16 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸிடம் இருப்பதால் அக்கட்சி வேட்பாளரே வெற்றிபெறுவார்.
இந் நிலையில், ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி,முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில் முதல்வர் ரங்கசாமியின் ஆதரவு நாராயணசாமிக்கே உள்ளதால் சிக்கல் வலுத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கட்சி மேலிடப் பார்வையாளரும், பொதுச் செயலாளருமான சத்யஜித் கெய்க்வாட் புதுவைவிரைந்துள்ளார். டெல்லியிலிருந்து இன்று காலை சென்னை வந்த அவர் புதுவை சென்றார்.
அங்கு கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி. ஆகியோரை தனித்தனியாக சந்திக்கிறார். பின்னர் கட்சித்தலைவர்களுடனும் பேச்சு நடத்துகிறார். அதன் பின்னர் வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம்அறிவிக்கும்.