தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம்: இல.கணேசன்
சென்னை:
அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவதை அரசியல் கட்சித் தலைவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காரைக்காலில் காங்கிரஸ் எம்.பி. மணிசங்கர அய்யர் தாக்கப்பட்டது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அரசு விழாக்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது நடந்திருந்தால் மணிசங்கர அய்யர் மீதான தாக்குதலும் தவிர்க்கப்பட்டிருக்க கூடும்.
டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்கள் முடிந்த பின்னர்தான் தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி ஆணையக் கூட்டத்தை பிரதமர் வாஜ்பாய் உடனடியாக கூட்ட வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு உரிய நீர் விரைவில் கிடைக்க ஏதுவாக அமையும் என்றார்.