சந்திரிகா-- ரணில் சந்திப்பு: பேச்சுவார்த்தை தோல்வி
கொழும்பு:
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தும், நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் இருவரும் தீவிரமாகவிவாதித்தனர். ஆனால், இதில் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கவில்லை. இதனால் எந்தஉடன்பாடும் ஏற்படவில்லை.
நாட்டில் எமர்ஜென்சியை அமலாக்கி- வாபஸ் பெற்று, பாதுகாப்பு, செய்தி, உள்துறை அமைச்சகங்களைசந்திரிகாதன் வசம் எடுத்துக் கொண்ட பின்னர் இருவருக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு இதுவேயாகும்.
இன்று காலை 11.30 மணியளவில் அதிபரின் மாளிகைக்கு ரணில் சென்றார். அதிபரின் அலுவலகத்தில் அவர்காத்திருந்தார். ஆனால், அதிபர் சந்திரிகா தனது மாளிகையில் இருந்து தாமதமாகவே அங்கு வந்தார். இதனால்திட்டமிட்டதை விட தாமதமாகவே பேச்சு தொடங்கியது.
மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆளும் கூட்டணியின் மூத்த தலைவர்களையும் அழைத்துக் கொண்டு தன்னைச் சந்திக்கவருமாறு ரணிலுக்கு சந்திரிகா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தனது செயலாளர் பிராட்மன் வீரகோனைமட்டும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சந்திரிகாவைச் சந்திக்கச் சென்றார் ரணில்.
இதன்மூலம் சந்திரிகாவின் உத்தரவுகளுக்கு எல்லாம் கட்டுப்பட முடியாது என்பதை ரணில் உணர்த்தினார். இந்தச்சந்திப்பு குறித்து செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் அதிபரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.
இருவரும் தனியே சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சு நடத்தினர். ஆனால், இருவருமே தங்கள் நிலையில்இருந்து இறங்கி வர மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இலங்கையில் உருவாகியுள்ளஅரசியல் நெருக்கடியைத் தீர்க்க எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
பறிக்கப்பட்ட துறைகளை மீண்டும் தனது அமைச்சர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரணில் கோரிக்கைவைக்கவில்லை.
அதே நேரத்தில் புலிகளுடன் நார்வே முயற்சியால் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளை இனிமேல் நீங்களேநடத்திக் கொள்ளுங்கள் என்று சந்திரிகாவிடம் ரணில் கூறியதாகத் தெரிகிறது. ராணுவம், உள்துறை,செய்தித்துறைகளை என் அமைச்சர்களிடம் இருந்து பறித்துவிட்ட நிலையில் என்னால் பேச்சுவார்த்தையைத் தொடரமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதற்கு சந்திரிகா எந்த பதிலும் தரவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் நாட்டின் பாதுகாப்பைகருத்தில் கொண்டே தான் செயல்பட்டு வருவதாக சந்திரிகா கூறியதை ரணில் ஏற்க மறுத்துவிட்டார்.
இருப்பினும் இன்று நடந்த சந்திப்பு குறித்து கூட்டறிக்கை வெளியிடவும், அடுத்த வாரம் மீண்டும் சந்தித்துப்பேசவும் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பேச்சுக்களின்போது ரணிலை ஆதரிக்கும்சிறுபான்மையின கட்சித் தலைவர்களையும் உடன் வைத்துக் கொண்டு ஆலோசனை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இன்று சந்திரிகாவை சந்திக்கச் செல்லும் முன் பேசிய ரணில், புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள்குறித்தும், சந்திரிகாவின் நடவடிக்கைகளால் அமைதி முயற்சிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டன என்பதுகுறித்துமே முக்கியமாக விவாதிப்பேன் என்றார்.
மேலும் அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து தேசிய அரசு அமைக்கலாம் என்ற சந்திரிகாவின்யோசனையையும் ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறிய ரணில், புலிகளுடனான பேச்சு குறித்து மட்டுமேஆலோசிப்பேன் என்றார்.
இந் நிலையில் கொழும்பு வந்துள்ள நார்வே குழுவினர் நாளை கிழிநொச்சி செல்வர் என்றும் புலிகளின் தலைவர்பிரபாகரனைச் சந்திப்பர் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே விரைவிலேயே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு இடைத் தேர்தலுக்கு சந்திரிகா ஆணையிடவாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். ஜனதா விமுக்தி பெரமுனா அல்லது மக்கள் விடுதலைமுன்னணியுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளை சந்திரிகா துவக்கிவிட்டதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications