587 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ், 2,162 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ரத்து
சென்னை:
வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர்கள் 2,791 ஊழியர்களில் 587 பேரை டிஸ்மிஸ் செய்தது செல்லும் என்று 3 நீதிபதிகள் குழு தனது பரிந்துரையில் தெரிவித்துள்ளதை தமிழக அரசு அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வழக்குகளை நீதிபதிகள் சம்பத், தங்கவேலு, மலைசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வந்தது. அதன் முதல் கட்ட அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் சில பரிந்துரைகளை நீதிபதிகள் அரசுக்குத் தெரிவித்துள்ளனர். இந்த பரிந்துரைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அதன் இறுதியில் நேற்று மாலை தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஒரு அரசாணையைப் பிறப்பித்தார்.
அதில், டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2,791 தலைமைச் செயலக ஊழியர்களில் 124 பேர் மட்டுமே எந்தவித தண்டனையும் இல்லாமல் மீண்டும் பணியில் சேர்க்கப்படவுள்ளனர். 530 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது செல்லும் என்று நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது. அரசு இந்தப் பரிந்துரையை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும் 53 பேர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2,084 பேருக்கு ஊதிய உயர்வு ரத்து செய்யப்படும்.
அதேபோல, சென்னையைச் சேர்ந்த டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட மற்ற அரசு ஊழியர்கள் 146 பேரில், 57 பேருடைய டிஸ்மிஸ் செல்லும் என்று நீதிபதிகள் குழு கூறியுள்ளதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
78 பேருக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்படும். 3 பேருக்கு பதவி இறக்கம் கொடுக்கப்படும். 8 பேர் எந்தவித தண்டனையும் இல்லாமல் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று லட்சுமி பிரானேஷ் கூறினார்.
இதற்கிடையே போராட்டத்தை முன்னின்று நடத்திய ஊழியர் சங்கத் தலைவர்கள் அனைவரும் கூண்டோடு பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.