நக்சலைட் என்று கூறி மிரட்டியவர்கள் கைது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி அருகே நக்சலைட்டுகள் என்று கூறி பள்ளி தாளாளரை மிரட்டியதாக 2 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ளது பெரியமொட்டூர் கிராமம். இந்தக் கிராமத்தில் நாலந்தா மெட்குலேஷன் பள்ளிஉள்ளது. இதன் தாளாளராக ஆடிட்டர் கொங்கரசன் என்பவர் உள்ளார்.இவருக்கு கடந்த 14ம் தேதி ஒரு மிரட்டல்கடிதம் வந்தது.
அதில் நான் உள்ளிட்ட பல்வேறு நக்சலைட்டுகளும் சேர்ந்துதான் சந்திரபாபு நாயுடு கார் மீது வெடிகுண்டுதாக்குதல் நடத்தினோம். நீ எங்களுக்கு ரூ. 2லட்சம் கொடுக்க வேண்டும். மறுத்தால் உனது மகனை கடத்திச் சென்றுகொன்று விடுவோம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கிருஷ்ண அணைக்கு நீ மட்டும் தனியாக பணத்துடன் காரில் வர வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. கடிதத்தை ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி அனுப்புவதாகவும்கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து போலீஸில் புகார் செய்தார் கொங்கரசன். இதையடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்பெரியய்யா உத்தரவின் பேரில் சிறப்புப் படை அமைக்கப்பட்டது.
காலி சூட்கேஸுடன் காரில் கிருஷ்ணகிரி அணைக்குச் செல்லுமாறு கொங்கரசன் கேட்டுக் கொள்ளப்பட்டார்.அணைப் பகுதியில் சாதாரண உடையில் போலீஸார் பதுங்கியிருந்தனர்.
கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி குறிப்பிட்ட இடத்தில் காலி சூட்கேஸை வைத்து விட்டு திரும்பினார் கொங்கரசன்.மாலை 6 மணியளவில் 2 பேர் அங்கு வந்து சூட்கேஸை எடுத்துக் கொண்டனர். அப்போது போலீஸார் பாய்ந்துசென்று இருவரையும் மடக்கினர்.
இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் நக்சலைட்டுகள் இல்லை என்று தெரியவந்தது. நக்சலைட்டுகள்என்ற பெயரில் கொங்கரசனை மிரட்டிப் பணம் பறிப்பதே அவர்களது நோக்கம் என்றும் விசாரணையில்தெரியவந்தது.