ஒரே நாளில் பத்திரிக்கைகள் மீது 23 அவமதிப்பு வழக்குகள்!
சென்னை:
சென்னை நீதிமன்றத்தில் ஒரே நாளில், பல்வேறு பத்திரிக்கைகள் மீது 23 அவமதிப்பு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
பத்திரிக்கைகள் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்குகளைப் போடுவது தொடர்ந்து வருகிறது. இந் நிலையில், பல்வேறு பத்திரிக்கைகள் மீது ஒரே நாளில் 23 அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்து வந்த துக்ளக் ஆசிரியர் சோ மீதும் அவமதிப்பு வழக்கு அஸ்திரம் பாய்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14 மற்றும் 30 ஆகிய தேதிகளில் துக்ளக் பத்திரிக்கையில், வெளியான கார்ட்டூன்கள், அரசையும், முதல்வரையும், அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி துக்ளக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வக்கீல் டி.வி.கணேஷ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி, கார்ட்டூன் கலைஞர் ரா, பதிப்பாளர் ரங்காச்சாரி ஆகியோரை டிசம்பர் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இதேபோல, கல்கி, முரசொலி ஆகிய பத்திரிக்கைகளில் ஏப்ரல் 25ம் தேதி வெளியான கார்ட்டூன், அரசுக்கு அவமரியாதை சேர்ப்பதாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளின் ஆசிரியர்கள் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.
நேற்று ஒரே நாளில் இத்தனை அவமதிப்பு வழக்குகள் பத்திரிக்கைகள் மீது தொடரப்பட்டுள்ளது பத்திரிக்கையாளர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்து, முரசொலி, நக்கீரன், இந்தியா டுடே, கல்கி, தீக்கதிர், தினகரன், தினமலர், துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகள் மீது மொத்தம் 80க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications