மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம்: ஆசிரியரை எதிர்த்து போராடிய 400 மாணவ, மாணவிகள் சஸ்பெண்ட்
புதுவை:
பாண்டிச்சேரியில் மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்திய 400 மாணவ, மாணவியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பாண்டிச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாண்டிச்சேரி கோமேட்டில் இந்திரா நகர் பகுதியில் உள்ளது அரசு மேல் நிலைப் பள்ளி. இங்கு படித்து வரும் மாணவிகளிடம், அந்த பள்ளியின் ஆசிரியர் தோத்தாத் என்பவர் செக்ஸ் சில்மிஷம் செய்து வருவதாக புகார் எழுந்தது.
இது குறித்து நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் புகார் கூறினார். ஆனால், அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது.
இதனால் கோபமடைந்த மாணவ, மாணவிகள் கடந்த 18ம் தேதி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து தோத்தாத் மீது விசாரணை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.
ஆனால், போராட்டம் நடத்திய இந்த 400 மாணவ, மாணவிகளையும் ஒரு வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் புதுவை கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்து பள்ளி முன் ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்கள், அடுத்ததாக சட்டசபை வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் புதுவையில் உள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் சேர்ந்து கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications