மதுக் கடை: டெபாசிட்டை திரும்பக் கேட்டு இளைஞர்கள் முற்றுகை
கோவை:
பெண்கள், பொது மக்கள் போராட்டத்தால் பல இடங்களில் அரசு மதுக் கடைகளைத் திறக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதால் இதில் வேலைக்குச் சேர செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பத் தரக் கோரி மதுக் கடை மேற்பார்வையாளர்கள் கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
கோவையின் பல்வேறு பகுதிகளில் அரசு மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பெண்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடைகளை திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
மேலும், இந்தக் கடைகளில் பணியாற்ற நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களுக்கு இன்னும் பணி நியமன உத்தவும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து இந்தக் கடைகளில் பணியாற்ற நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திரண்டனர்.
பணி நியமன உத்தரவையும் வழங்காமல், கடைகளில் பணியாற்றவும் முடியாத சூழலும் உருவாகி இருப்பதால் தாங்கள் அரசுக்கு செலுத்திய ரூ. 50,000 டெபாசிட் தொகையை திரும்பத் தருமாறும், எங்ளுக்கு இந்த வேலையே வேண்டாம் என்றும் கூறி அவர்கள் கூறினர்.
அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நிச்சயமாக கடைகள் திறக்கப்படும் என்றும், வேலை தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்.
முன்னதாக கடைகளை மூடக் கோரி பொது மக்களும் இங்கு முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
நாகரீகம் அல்ல: சிதம்பரம்
மதுக் கடைகளை திறந்து வைத்து மது விற்பனை செய்வது அரசின் வேலையல்ல, அது நாகரீகமான செயலும் அல்ல என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திராவிடக் கட்சி ஆட்சி நடக்கும் தமிழகத்தில் மதுக் கடைகளை அரசே திறந்து நடத்தி வருகிறது. தமிழகம் எங்கு போய்க் கொண்டுள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மது விற்பனை செய்வது அரசின் வேலையல்ல. மூடப்பட்டுக் கிடக்கும் ஜவுளி ஆலைகளை திறக்க முயற்சி செய்து, பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வு கொடுக்க முடியாத அரசு எப்படி மதுக் கடைகளை நடத்தலாம் என்றார்.