மீண்டும் 11 மீனவர்களை பிடித்து சென்றது இலங்கை கடற்படை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச்சென்றுள்ளனர்.
சமீபத்தில்தான் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மீனவர்களைப் பிடித்துச் சென்றது இலங்கைகடற்படை. அவர்களில் 52 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன் தினம் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் 11 பேரைத் தவிர மற்றவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். அவர்களை இலங்கைகடற்படை பிடித்து சென்று விட்டதாக திரும்பி வந்த மீனவர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே ஜெகதாப்பட்டனத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இன்னும் இலங்கையில்தான் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களே இன்னும் வந்து சேராத நிலையில் மேலும் 11 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதுஜெகதாப்பட்டனம் மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந் நிலையில், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கைவிட விடுதலைப் புலிகளை எச்சரிக்குமாறு முதல்வர்ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.