திருவாரூர், நாகையில் 5,000 விவசாயிகள் கைது
திருவாரூர்:
மேட்டூர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடக் கோரி காவிரி டெல்டாப் பகுதியின் கடை மடை மாவட்டங்களான நாகப்பட்டனம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
காவிரியின் கடை மடைப் பகுதி மாவட்டங்களான நாகை மற்றும் திருவாரூரில் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதையடுத்து மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டும் என்று தஞ்சை, நாகை, திருவாரூர் பகுதிகளில் விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருகின்றனர்.
சமீபத்தில் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 5,000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி அணை திறந்து விடப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நீர் போதாது, கூடுதல் நீர் திறந்து விடப்படவேண்டும் என்று கோரி நாகை,திருவாரூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் சாலை மறியல் மேற்கொண்டனர்.
நாகை, திருவாரூர், மன்னார்குடி, சீர்காழி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சாலை மறியல்கள் நடந்தன. இதையடுத்து கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம் ஆகியோர் உள்ளிட்ட 5,000 விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
விவசாயிகள் போராட்டத்தையடுத்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications