காங்.- திமுக கூட்டணிக்கு வாஜ்பாய் கடும் கண்டனம்
ஹைதராபாத்:
ராஜீவ்காந்தியைக் கொலை செய்தவர்களுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள கட்சியுடன் (திமுக) காங்கிரஸ் கட்சிதேர்தல் உடன்பாடு வைக்க முயலுவதாக பிரதமர் வாஜ்பாய் கடும் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று ஹைதராபாத் நகரில் தொடங்கியது. வைஸ்ராய்ஹோட்டலில் தொடங்கிய இந்த கூட்டத்திற்குக் கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். பிரதமர்வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
கூட்டத்தில் வாஜ்பாய் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் முன் கூட்டியே வருவதற்கான அறிகுறிகளைவெளிப்படுத்தினார். இருப்பினும் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.வாஜ்பாயின் பேச்சில் காங்கிரஸ், திமுக இடையிலான தேர்தல் கூட்டணியும் இடம் பெற்றது.
வாஜ்பாய் பேசுகையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலைசெய்தவர்களுடன் தொடர்பு வைத்துள்ள ஒரு கட்சியுடன் உறவு வைத்துள்ளது. இது முழுக்க முழுக்க சந்தர்ப்பவாதஅரசியலாகும்.
அதிகாரத்தைப் பிடிக்க கொள்கைகள், நெறிமுறைகளை மறந்து காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து போயுள்ளதை இதுகாட்டுகிறது. ஆனால் பா.ஜ.க.வோ, தேசியவாதம், ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை உள்ள கட்சிகளுடன்மட்டுமே கைகோர்த்து, உடன்பாடு வைத்துக் கொள்ளும்.
சமீபத்தில் நடந்த 3 சட்டசபைத் தேர்தல்களில் பெற்ற படுதோல்விக்குப் பிறகு கூட்டணி பாதையைதேர்ந்தெடுத்துள்ளது காங்கிரஸ். ஆனால் பா.ஜ.க.வோ, ஆரம்பத்திலிருந்தே கூட்டணி கட்சிகளால் மட்டுமேஇவ்வளவு பெரிய நாட்டை வழி நடத்திச் செல்ல முடியும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அதன்படிசெயல்பட்டு வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக எனது தலைமையில் இயங்கிவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும், ஒவ்வொரு மாநிலத்தையும் நாங்கள்அணுகியதுமே இதற்குக் காரணம் என்றார் வாஜ்பாய்.
வாஜ்பாய் மீது இன்னும் நல்ல மரியாதை வைத்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறி வரும் நிலையில்,திமுகவை, ராஜீவ் காந்தியைக் கொன்ற கட்சி என்பது போல வாஜ்பாய் பேசியிருப்பது, திமுகவினரிடையே பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிகிறது.