அதிர்ச்சியிலிருந்து மீளாத மணப்பெண்
திருச்சி:
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமின்றி தப்பிய மணப்பெண் ஜெயஸ்ரீ இறந்துவிட்டதாக திருச்சியில் வதந்தி பரவியது. ஆனால் அவர் இறக்கவில்லை என்றும் மன அதிர்ச்சியிலிருந்து மீளாமல்அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளார் என்று திருச்சி தனியார் மருத்துவமனைவிளக்கியுள்ளது.
ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் குருராஜன் உள்ளிட்ட 57 பேர் கோரமாகபலியாகிய நிலையில் மணப்பெண் ஜெயஸ்ரீ காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் தீவிபத்தினால்அவர் பெரும் மன அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
திருச்சியில் உள்ள ராயல் பேர்ல் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சேர்க்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.இந் நிலையில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவின. ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.
மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜானகிராம் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயஸ்ரீ க்கு உடல்ரீதியாக ஒரு காயமும் இல்லை. ஆனால் மன அதிர்ச்சியில் அவர் உள்ளார். இதனால் அவரால் பேச முடியவில்லை.
சனிக்கிழமைதான் அவர் கதறி அழுதார். இருப்பினும் விபத்து குறித்து அவரிடம் எதையும் முழுமையாகதெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை அவரிடம் தீ விபத்தில் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் இறந்துவிட்டார்கள் என்று மட்டும்தான் தெரிவித்தோம். மாப்பிள்ளை குருராஜன் இறந்ததை அவரிடம் கூறவில்லை. வேறுஒரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மட்டும் தெரிவித்துள்ளோம்.
இன்னும் ஒரு வாரத்திற்கு அவருக்கு மனநல ஆலோசனைகள் கொடுக்கவுள்ளோம். அதற்குப் பிறகே அவரிடம்நடந்த சம்பவத்தை முழுமையாக தெரிவிப்போம் என்றார்.