சென்னை: கிணறு தோண்டும்போது மண் சரிந்து இருவர் பலி
சென்னை:
சென்னை சூளைமேட்டில் கிணறு தோண்டிக் கொண்டிருந்த 2 தொழிலாளிகள் மண் சரிந்து பலிலாயனார்கள்.
சூளைமேடு சிவன் கோயில் தெருவில் வசிப்பவர் ஏழுமலை. இவர் ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் தனது 3 அடி விட்டமும், 30 அடி ஆழமும் உள்ள தனது கிணற்றை 4 அடி விட்டமும், 45 அடி ஆழமும் கொண்டதாக மாற்ற முடிவெடுத்தார்.
இதற்கான பணியை தங்கவேலு என்பவர் காண்டிராக்ட் எடுத்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 9 தொழிலாளிகளைக் கொண்டு தொடங்கியுள்ளார்.
இன்று காலை ஏழுமலை (38), ராமதாஸ் (32) என்ற இருவரும் கிணற்றுக்குள் இறங்கி வேலை பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து இருவரும் புதையுண்டனர். இதில் இருவரும் பலியாகிவிட்டனர்.
ஏழுமலையின் தகப்பனார் வெங்கட்ராமனும் கிணறு தோண்டும் வேலைக்கு வந்திருந்தார். தன் கண்ணெதிரே தன் மகன் மண்ணுக்குள் மூழ்கியதைக் கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்த வட பழனி போலீஸ் உதவி கமிஷனர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். இருவரின் உடல்களையும் மீட்க தீயணைப்படையினர் முயற்சித்து வருகிறார்கள்.