அதிமுக பிரசாரங்களில் பா.ஜ.கவை காணவில்லை!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா உள்பட அதிமுகவினர் நடத்தி வரும் தேர்தல் பிரசாரங்களில் பா.ஜ.கவினரைப் பார்ப்பதேஅரிதாக உள்ளது. அதே போல கூட்டங்களில் பா.ஜ.க. குறித்து அதிமுகவினர் எதுவும் பேசுவதும் இல்லை.
குறிப்பாக பிரதமர் வாஜ்பாயின் பெயர் மிக மிகக் குறைவான அளவிலேயே அதிமுக கூட்டங்களில்பயன்படுத்தப்படுகிறது.
33 இடங்களில் அதிமுக போட்டியிட, மீதியுள்ள 7 தொகுதிகள் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 2தொகுதிகள் தவிர மற்றவற்றில் அக் கட்சி மிகக் கடினமான சவாலை எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் ஜெயலலிதா தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். துணைப் பிரதமர் அத்வானியும் தனது ரத யாத்திரையை நடத்தி தமிழகத்தில் வேட்பாளர்களுக்கு வாக்குகேட்டு வருகிறார்.
பிரச்சாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அத்வானி மிகுந்த முக்கியத்துவம் தந்து அவர் பெயரைக் குறிப்பிட்டுபேசி வருகிறார். ஆனால், பா.ஜ.கவை ஜெயலலிதா தனது கூட்டங்களில் குறிப்பிடுவதையே தவிர்த்து வருகிறார்.
சோனியாவை வாய்க்கு வந்தபடி தாக்கி பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, பேச்சை முடிக்கும் தருவாயில், மத்தியில்நமது ஆதரவுடன் இந்தியரான வாஜ்பாயின் ஆட்சி அமைய வாக்களியுங்கள் என்று சாஸ்திரத்துக்காக மட்டுமேகுறிப்பிடுகிறார். மற்றபடி பா.ஜ.க பற்றி பேச்சு, மூச்சே இல்லை.
அதிமுகவினரும் பிரச்சாரத்தில் பா.ஜ.கவுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. அதிமுகவினர் தனி ஆவர்த்தனமேவாசித்து வருகின்றனர்.
ஜெயலலிதா செல்லும் வழியில் எல்லாம் கட்சிக் கொடிகள், கட் அவுட்கள், பேனர்கள் என எதைப் பார்த்தாலும்அதிமுக மயமாகவே உள்ளது. பார்மலிட்டிக்காக எங்காவது ஒரு சில இடங்களில் தான் பா.ஜ.க. கொடியை காணமுடிகிறது.
அதேபோல, வாஜ்பாய்க்கு கட் அவுட்டே வைக்கவில்லை. அத்வானியின் போஸ்டரைக் கூட எங்கும் பார்க்கமுடியவில்லை.
மேலும், பிரசாரங்களின்போது யார் பிரதமராக வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று ஜெயலலிதாகேட்கும்போதெல்லாம், நீங்கள்தான் அம்மா என்றுதான் அதிமுகவினர் உரத்த குரலில் பதில் அளிக்கிறார்கள்.
தவறிக் கூட யாரும் வாஜ்பாய் என்று கூறுவதில்லை. அதை ஜெயலலிதாவும் முக மகிழ்ச்சியோடு ஏற்று கையைஆட்டுகிறார். இதைக் கண்டு பிரச்சாரத்துக்கு வந்த ஓரிரு பா.ஜ.கவினர் நெளிவதையும் காண முடிகிறது.
"அம்மா"வின் பெயரைச் சொல்லி...
இதற்கிடையே முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடம் பட்டியல் போட்டுத்தான் வாக்கு கேட்போம்என விவசாயத்துறை அமைச்சர் அண்ணாவி கூறியுள்ளார்.
திருச்சியில் மாவட்ட அதிமுக மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாவி பேசுகையில், மற்ற கட்சிகளைப்போல அதிமுக பிரசாரத்தில் ஈடுபடாது. கடந்த மூன்றரை ஆண்டு கால அதிமுக ஆட்சியின் சாதனைகளைமக்களிடம் பட்டியல் போட்டு ஓட்டு சேகரிப்போம்.
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழக திட்டங்களை நிறைவேற்ற விடாமல்முட்டுக் கட்டை போட்டு வந்தது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதும், தமிழகத்தின் நலனுக்காக ஒருதிட்டத்தையும் கொண்டு வரவில்லை திமுக என்றார்.
அம்மாவின் சாதனைகளை மட்டுமே சொல்வோம் என்று அமைச்சர் பேசியதை கூட்டத்துக்கு வந்த பா.ஜ.கவினர்நொந்து போய் கேட்டுக் கொண்டிருந்தனர். கடந்த முறை பா.ஜ.க. போட்டியிட்ட இந்த திருச்சி தொகுதியில்தற்போது அதிமுகவே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.கவின் சப்பை கட்டு:
ஜெயலலிதா தனது பிரச்சார மேடைகளில் பா.ஜ.கவினரை ஏற அனுமதிக்கவில்லையே என்று அக் கட்சியின்பொதுச் செயலாளர் குமாரவேலுவிடம் கேட்டபோது, நாங்கள் முழு திருப்தியுடன் அதிமுகவுடன் இணைந்துதேர்தல் வேலை பார்க்கிறோம். பிரச்சார மேடையில் வேட்பாளர்களுக்கு மட்டுமே இடம் தரப்படுகிறது என்றார்.