அதிமுக ஊழியர் கூட்டத்தில் அடிதடி: எம்எல்ஏ மீது சேர்கள் வீச்சு- தப்பி ஓடிய அமைச்சர்
வேடசந்தூர்:
வேடசந்தூர் அதிமுக ஊழியர் கூட்டத்தில் அடிதடி ஏற்பட்டது. வேட்டிகள் உருவப்பட்டு, சட்டைகள் கிழிக்கப்பட்டன. எம்.எல்.ஏ. ஆண்டிவேல் நோக்கி நாற்காலிகள் வீசப்பட்டன.
பழனி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதி வேடசந்தூர். இங்குள்ள குங்குமகாளியம்மன் கோவில் மண்டபத்தில் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விசுவநாதன், ஆண்டிவேல் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆண்டிவேல் மீது வேடசந்தூர் ஒன்றிய அதிமுகவினரிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே காண்டிராக்ட்களை தந்து வருவதாகவும், தொண்டர்களுக்கு ஒரு உதவியும் செய்வதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. இதனால் அவர் ஊழியர் கூட்டத்தில் அவரை கலந்து கொள்ளக் கூடாது என அதிமுகவினர் கூறியிருந்தனர்.
ஆனால், அமைச்சரின் கார் மண்டபத்துக்குள் வந்தது. உடனே அவரது காரை அதிமுகவினர் வழிமறித்தனர்.
சிலர் காரின் மீது செருப்புகளை வீசினர். ஆனால் காருக்குள் பார்த்தபோது ஆண்டிவேல் இல்லை. செருப்பு வீச்சு நடக்கும் என்பதை உணர்ந்து கொண்ட அவர் பாதி வழியிலேயே காரிலிருந்து இறங்கி, பின் பக்கமாக மண்டபத்துக்குள் நுழைந்து விட்டார்.
இதையடுத்து மண்டபத்துக்குள் நுழைந்த அதிமுகவினர் அங்கு ஆண்டிவேல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஆத்திரமடைந்தனர். அமைச்சர் விசுவநாதன் சமாதானப் படுத்த முயன்றார். அதை ஏற்காமல் ஆண்டிவேல் மீது நாற்காலிகளை வீசத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் விசுவநாதன் ஊழியர் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு வெளியே ஓடினார்.
ஆண்டிவேலை அவரது ஆதரவாளர்கள் பத்திரமாக மீட்டு மண்டபத்தை விட்டு வெளியேற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே நடந்த அடிதடியில் பல அதிமுகவினர் காயமடைந்தனர்.
படுகாயமடைந்த இருவர்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.