சோனியா வெளிநாட்டவர் என்றால்.. ஆரியர்கள் யார்?: கருணாநிதி கேள்வி
சென்னை:
பிரதமர் பதவிக்கு வெளிநாட்டவரான சோனியா வரக் கூடாது என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், நாங்கள் கைபர் கணவாய் வழியாக நுழைந்த ஆரியர்களின் வரலாற்றில் இருந்து பேசஆரம்பிப்போம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுச் செயல் திட்டத்தில் வெளிநாட்டில் பிறந்தவர் உயர் பதவிக்கு வரக்கூடாது என்று இருப்பதாகவும் அதில் நாங்கள் கையெழுத்துப் போட்டதாகவும் வெங்கையா நாயுடுகூறியிருக்கிறார்.
அப்படி நாங்கள் கையெழுத்து எதையும் போடவில்லை. உயர் பதவிக்கு சோனியா வரக் கூடாது என்றால்நாடாளுமன்றத்தில் அவர் எப்படி எதிர்க் கட்சித் தலைவராக இருக்க முடிந்தது.
வெங்கைய்யா நாயுடு பிள்ளை பிடிக்கும் (கட்சிக்கு ஆள் பிடிக்கும்) வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதைஅவர் தொடர்ந்து செய்யட்டும்.
வெளிநாட்டினர் உயர் பதவிக்கு வரக் கூடாது என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், நாங்கள்கைபர் கணவாயில் (ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த வரலாறு) இருந்து தொடங்குவோம்.
அதே போல ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ளவே சோனியாவுடன்கூட்டணி அமைத்ததாக வெங்கையா பேசியிருக்கிறார். தொடர்ந்து இது மாதிரியான அபாண்டங்களை அவர்பேசினால், அவரைப் பற்றிய தகவல்களை நாங்களும் வெளியே சொல்ல ஆரம்பிப்போம். அப்புறம் அவரது கதைசிரிப்பாய் சிரிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்றார்.
முன்னதாக வேட்பாளர்களிடம் திமுக தலா ரூ. 60 லட்சம் வசூல் செய்துள்ளதாக அதிமுக கொடுத்துள்ள புகாரைமறுத்து கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் விவரம்:
திமுகவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் தலா ரூ. 60 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கமிஷனிடம் இரு அதிமுக எம்.பிக்கள் புகார் கூறியுள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.
திமுகவின் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் அதிமுக எம்.பிக்கள் பெயரில் பொய்ச் செய்திவெளியாகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக தேர்தல் நிதி திரட்டியதாக சொல்லப்பட்டுள்ள தகவலேதவறானது.
பொதுவாக திமுக சந்திக்கும் எல்லா தேர்தல்களுக்கும் சேர்த்து மொத்தமாக நிதி திரட்டினோம். ஒவ்வொருமாவட்டத்திலும் எவ்வளவு திரட்டப்பட்டது என்பதை பத்திரிக்கைகளில் வெளிப்படையாகவே தெரிவித்தோம்.
மொத்தமாக ரூ. 30 கோடியை உடன் பிறப்புக்கள் திரட்டித் தந்தார்கள். அது இந்தியன் வங்கிக் கிளைகளில்டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் திடீரென மக்களவைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து போட்டியிட விரும்புவோர் ரூ. 10,000 செலுத்தி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறுஅறிவித்தோம். இவ்வாறு 300 பேர் பணம் கட்டி விண்ணப்பித்தார்கள். இதில் 15 பேர் மட்டுமே வேட்பாளர்களாகஅறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக எம்.பிக்கள் சொல்லியிருப்பதைப் போல யாரிடமும் ரூ. 50 லட்சம், ரூ. 60 லட்சம் எல்லாம் கேட்கவும்இல்லை. அவர்கள் கட்டவும் இல்லை. அதனால் திருப்பித் தர வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
வேட்பாளர்களிடம் திமுக பணம் வாங்கியதாக, தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவினர் கொடுத்துள்ளதாக,பத்திரிக்கைகளில் வந்துள்ள புகார் அனாமதேய செய்திகளை அடிப்படையாகக் கொண்டதே ஒழிய அதில்கடுகளவும் உண்மையில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.