டெல்லி சென்றார் ரஜினி: வாஜ்பாயுடன் சந்திப்பு?
சென்னை:
இன்று காலை ரஜினி திடீரென டெல்லி வழியாக இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை வழியனுப்ப அவரது மனைவி லதாவும் வந்திருந்தார்.
விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினி, இமயமலையில் உள்ள பாபாஜி ஆசிரமத்துக்குச் செல்கிறேன். அங்கு ஒரு வாரம் தங்கியிருப்பேன் என்றார்.
ஆனால், தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரோ, பிரதமர் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று ரஜினி டெல்லி சென்றுள்ளார் என்றார்.
விமான நிலையத்தில் ரஜினியிடம், டெல்லியில் வாஜ்பாயை சந்திபீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நான் அதற்காக செல்லவில்லை. நான் ஏற்கனவே கூறியது போல தமிழக மக்கள் தண்ணீருக்காக மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
குறிப்பாக பெண்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பிரச்சனையை வைத்துத் தான் நான் எனது அரசியல் கருத்தைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டு மக்கள் புத்திசாலிகள். அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள் என்றார்.
ஒரே மேடையில் வாஜ்பாய்-ரஜினி-ஜெ
இந் நிலையில் தமிழக பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் லலிதா சுபாஷ் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசுகையில்,
பிரதமர் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று இன்று ரஜினி டெல்லி சென்றுள்ளார். வரும் மே 5ம் தேதி வாஜ்பாய் சென்னை வருகிறார். இங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் வாஜ்பாயுடன் முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்பார்.
அதில் ரஜினியையும் பங்கேற்க வைக்க நாங்கள் முயன்று வருகிறோம் என்றார்.
இதை ஜெயலலிதா ஏற்பாரா என்று நிருபர்கள் கேட்டபோது, நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்புகிறார். எனவே ரஜினி நிச்சயம் பங்கேற்பார் என்றார் லலிதா சுபாஷ்.