திமுக வேட்பாளர்கள் தயாநிதி மாறன், செ.குப்புசாமி வேட்பு மனுத் தாக்கல்
சென்னை:
மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், வட சென்னை திமுக வேட்பாளர்செ.குப்புசாமி ஆகியோர் இன்று தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வரும் அமாவாசை, நல்ல நாளுக்காகக்காத்திருக்கும் நிலையில், திமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இன்று பகல் 12 மணிக்கு ஏராளமான திமுகவினர் பின்தொடர, ஊர்வலமாய் வந்த தயாநிதி மாறன் சென்னைமாநகராட்சி ஆணையர் விஜய்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை முன்மொழிந்து கருணாநிதி, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
தயாநிதி மாறனுடன் முன்னாள் மத்திய அமைச்சரும் தென் சென்னை திமுக வேட்பாளருமான டி.ஆர்.பாலு,முன்னாள் திமுக அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள், தயாநிதியின் தாயார் மல்லிகா, மனைவி, தங்கை,கலாநிதியின் மனைவி காவேரி,
கருணாநிதியின் மகள் செல்வி, முரசொலி செல்வம், மு.க. தமிழரசு மற்றும் திமுக தொண்டர்களும், கூட்டணிக்கட்சியின் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர்.
மனு தாக்கல் செய்தவுடன் அங்கிருந்த அனைவருக்கும் தயாநிதியின் குடும்பத்தினர் இனிப்புகளை வழங்கினர்.
மனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி, நான் பிரச்சாரத்துக்குப் போன இடங்களில் எல்லாம்மக்கள் பெரும் அளவில் திரண்டு, ஆதரவு தந்தார்கள். இதனால் என் வெற்றி உறுதி என்றார்.
செ.குப்புசாமி மனு தாக்கல்:
அதே போல வட சென்னைத் தொகுதியில் போட்டியிடும் செ.குப்புசாமி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டஆட்சியர் கண்ணுச்சாமியிடம் இன்று பகலில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவை வட சென்னை மாவட்ட திமுக செயலாளர் பலராமன் முன்மொழிந்தார்.
ஸ்டாலின் தலைமையில் ஏராளமான திமுகவினர் குப்புசாமியுடன் ஊர்வலமாய் வந்து மனு தாக்கல் செய்தனர்.மேலும் தயாநிதி வேட்பு மனு தாக்கல் செய்தவுடன் அங்கிருந்து ஊர்வலமாய் கிளம்பிய திமுக தொண்டர்களும்கூட்டணிக் கட்சியினரும் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து குப்புசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர்.
டி.ஆர்.பாலுவும் அங்கு வந்தார். நேராக கலெக்டர் கலெக்டர் கண்ணுச்சாமியிடம் சென்ற அவர், தேர்தல்முறைகேட்டில் அதிமுகவுக்கு உதவியாக இருந்த காரணத்தால் தேர்தல் கமிஷனால் நீங்கள் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளீர்கள்.. இந்த நிலையில் உங்களிடம் எப்படி மனு தாக்கல் செய்ய முடியும் என்று கேட்டார்.
அதற்கு பதில் தந்த கலெக்டர், இன்னும் எனக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் கைக்கு வரவில்லை. அதுவரை நான் தான்கலெக்டர். இதனால் நீங்கள் தாராளமாய் என்கிட்ட மனுவைத் தரலாம் என்றார்.
ஆனால், பாலு பதிலுக்குப் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இடையில் குப்புசாமி தலையிட்டுஅமைதிப்படுத்திவிட்டு மனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வளர்பிறையான, ஏப்ரல் 22ம் தேதியன்று வேட்பு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றுஅந்தக் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதே போல திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவும் நல்ல நாள் பார்த்து 22ம் தேதி தான் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இந்த நாள், கிழமைகளில் நம்பிக்கை இல்லாத மதுரை, நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 21ம் தேதிமனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை வேட்பாளர் சுப்பராயனும் 21ம் தேதிதான் மனு தாக்கல் செய்கிறார்.இன்னொரு வேட்பாளரான தென்காசி அப்பாத்துரை 19ம் தேதி மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
வந்தவாசி தொகுதி மதிமுக வேட்பாளர் செஞ்சி ராமச்சந்திரன் 23ம் தேதி மனு தாக்கல் செய்கிறார். மற்ற மதிமுக வேட்பாளர்கள்19ம் தேதி மனு தாக்கல் செய்கிறார்கள்.
விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் 21ம் தேதி சிதம்பரத்தில் மனு தாக்கல் செய்கிறார்.