ரஜினிக்கு முக்காடு போட்ட மக்கள்: ராமதாஸ்
சென்னை:
தமிழக மக்கள் ரஜினியை முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்துவிட்டனர் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ரஜினியின் கடும் எதிர்ப்பு, ரசிகர்களின் பிரச்சாரத்தையும் மீறி போட்டியிட்ட 6 தொகுதிகளிலும்பா.ம.க. வெற்றி பெற்றுள்ள நிலையில் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சோனியா காந்தியை பதிபக்தி இல்லாதவர் என்று தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்தித் தாக்கியமுதல்வர் ஜெயலலிதா, எங்கள் கூட்டணியின் பிற தலைவர்களையும் கேவலமாக விமர்சித்தார்.
ஜெயலலிதாவின் கண்ணியமற்ற செயல்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். ஒருமாநிலத்தை ஆளும் கட்சி எல்லா இடங்களிலும் தோற்ற வரலாறே இல்லை.
இப்போது போட்டியிட்ட எல்லா இடத்திலும் ஆளும்கட்சி தோற்ற ஒரே மாநிலம் என்ற வகையில்தமிழகத்தை ஜெயலலிதா முதலிடத்துக்கு கொண்டு போய்விட்டார்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஜெயலலிதா பேசி வந்தது உண்மையானால், இந்தத் தீர்ப்பைஏற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
அதிமுக-பா.ஜ.க. கூட்டணி லட்சியக் கூட்டணி என்று அந்த இரு கட்சித் தலைவர்களும் சொல்லிவந்தார்கள். இதனால் அந்தக் கூட்டணி இத்தோடு முடிந்துவிடக் கூடாது.
சட்டசபைத் தேர்தலிலும் இந்த லட்சியக் கூட்டணி தொடர வேண்டும்.
இரட்டை இலைக்கு வாக்களித்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றுசொன்ன ஒருவர் (ரஜினி), இந்த முறை இரட்டை இலைக்கு வாக்களித்ததாக சொன்னார்.
நாங்கள் போட்டியிட்ட 6 இடங்களிலும் வீழ்த்திக் காட்டுவேன் என்று சபதமிட்டு அதற்கானவேலைகளிலும் ஈடுபட்டார்.
அவருக்கு முக்காடு போட்டு மூலையில் உட்கார வைத்த தமிழக வாக்காளர்களுக்கு என் நன்றி.
இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்த கருணாநிதிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்,தொண்டர்களுக்கும் நன்றி.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.