மருமகன் கொலை: அதிமுக பெண் எம்.எல்.ஏவிடம் நார்கோ அனாலிசிஸ் சோதனை
பெங்களூர் :
மருமகன் கொலை வழக்கு தொடர்பாக காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசனிடம், நார்கோ அனாலிசிஸ் என்ற நவீன முறை மூலம் உண்மையை வரவழைக்க பெங்களூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
செல்வி முருகேசனின் ஒரே மகள் கவிதா. இவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சிவக்குமார் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து சிவக்குமாருக்கு செல்வி முருகேசன் கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது. கொலை மிரட்டல் காரணமாக கவிதாவும் சிவக்குமாரும் பெங்களூருக்குச் சென்று விட்டனர்.
அங்கு இருவரும் மணவாழ்க்கையைத் தொடர்ந்த நேரத்தில் ஒரு மர்ம கும்பல் கவிதாவின் கண் எதிரே சிவக்குமாரைக் கடத்திச் சென்றது. இது குறித்து கவிதா, பெங்களூர் கோரமங்களா போலீஸில் புகார் செய்தார். இதற்கு மறுநாள் அத்திபெலே அருகே சிவக்குமாரின் பிணம் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து செல்வி முருகேசன் தலைமறைவானார். பின்னர் பெங்களூர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இவரிடம் உண்மையை வரவழைக்க நார்கோ அனாலிசிஸ் எனப்படும் மூளையில் பதிவாகியிருக்கும் சம்பவங்களை வெளியில் கொண்டு வரும் மருத்துவ சோதனையை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இம் மாதம் 7,8 தேதிகளில் இச் சோதனை நடக்கவுள்ளது. அவருக்கு மருந்துகள் செலுத்தப்பட்டு, மயக்க நிலை ஏற்படுத்தப்பட்டு, அவரது மூளையில் தேங்கிக் கிடக்கும் உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படும். இதன்மூலம் நடந்த உண்மைகளை வெளிக் கொண்டு வந்துவிட முடியும்.
செல்வி முருகேசன் தவிர மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய கராத்தே கோவிந்தராஜுக்கும் இந்த மயக்க நிலை சோதனை நடத்தப்படவுள்ளது.
அரை மயக்க நிலையில் வைத்து கேள்விகள் கேட்டு தகவல் சேகரிக்கும் நார்கோ அனாலிசிஸ் சோதனைக்கு உலகளவில் மனித உரிமை அமைப்புகளிடம் எதிர்ப்பு நிலவினாலும், பெங்களூரில் போலீசார் முக்கிய வழக்குகளில் இச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் போலி பத்திர ஊழலில் ஈடுபட்ட தெல்கியிடமும் பெங்களூர் போலீஸ் இச் சோதனையை நடத்தி அவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளை வெளிக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வி முருகேசனிடமும் இச் சோதனையை நடத்த அனுமதி கேட்டு பெங்களூர் ஆறாவது கூடுதல் பெருநகர நீதிமன்றத்தில் போலீசார் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
தனது மருமகனை தான் ஆள் வைத்து கொலை செய்யவில்லை என செல்வி முருகேசன் மறுத்து வருகிறார். ஆனால், அவர் மீது மருமகனின் குடும்பம் குற்றம் சாட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications