பாலகிருஷ்ணா சிறையில் அடைப்பு
ஹைதராபாத்: சினிமா தயாரிப்பாளரையும், அவரது நண்பரையும் துப்பாக்கியால் சுட்ட தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நீதிமன்றக் காவலில் 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மறைந்த ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவின் மகனான பிரபல நடிகர் பாலகிருஷ்ணா தனது வீட்டுக்கு வந்த படத் தயாரிப்பாளர் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான ஜோதிடர் சத்யநாராயணா ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டார்.
காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தில் காயமடைந்ததாக பாலகிருஷ்ணாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி மற்றும் ஆயுதம் வைத்து இருந்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவரை ஹைதராபாத் பெருநகர மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினார்கள். நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும், அதுவரை மருத்துவமனையில் சேர்க்குமாறும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து பாலகிருஷ்ணா மீண்டும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந் நிலையில் இன்று மீண்டும் மாஜிஸ்திரேட் காந்தி முன் ஆஜர்படுத்தப்பட்டார் பாலகிருஷ்ணா. அப்போது அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். வரும் 21ம் தேதி அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
தன்னை சுரேசும் ஜோதிடரும் கத்தியால் குத்தியதால், பாதுகாப்புக்காக சுட்டதாக பாலகிருஷ்ணா கதை விட்டுள்ளார். இதை குண்டடி பட்ட தயாரிப்பாளரும் ஜோதிடரும் மறுத்துள்ளனர். போதையில் பாலகிருஷ்ணா தங்களை கண்மூடித்தனமாக சுட்டதாக அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தயாரிப்பாளரை சுட்ட பாலகிருஷ்ணா












Click it and Unblock the Notifications